தாழ்வான பாலங்கள் மூழ்கும் அபாயம்: போக்குவரத்து, கல்வி பாதிப்பு
தாழ்வான பாலங்கள் மூழ்கும் அபாயம்: போக்குவரத்து, கல்வி பாதிப்பு
UPDATED : அக் 21, 2023 12:00 AM
ADDED : அக் 21, 2023 10:34 AM
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டத்தில் பருவமழை துவங்கி உள்ள நிலையில் நீர்நிலைகளின் தாழ்வான பாலங்கள் மூழ்கும் அபாயம் உள்ளது. ஒரு சில பாலங்கள் நீரோட்டத்தால் தொடர்ந்து சேதமடைந்து வருகின்றன. இதனால் போக்குவரத்து, கல்விக்காக மக்கள் சுற்றுப்புற கிராமங்களை சுற்றும் நிலை உள்ளது. மாவட்டத்தில் 450 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் அணைகள், ஆறுகள் போன்ற நீர்நிலைகள் செல்கின்றன.இவற்றை கடக்க முன்பு தாழ்வான பாலங்கள் கட்டப்பட்டன. மற்ற ஊரக இணைப்பு ரோடுகள் உயர உயர அவை இன்னும் தாழ்வாகின. அவ்வாறு ஆனதால் மழை பெய்தால் வரத்து அணைகளில் நீர்வரத்து ஏற்பட்டு நிரம்பி வழிந்தாலோ, ஆறுகளில் நீரோட்டம் இருந்தாலோ பாலம் மூழ்கி விடும். அதை பயன்படுத்திய கிராம மக்கள் கடும் சிரமத்தை சந்திக்க நேரிடும். மாணவர்கள் பலர் இதனால் மழைக்காலங்களில் பள்ளிகளுக்கு செல்லாமல் இருப்பர். முக்கிய ஊர்களுக்கு சுற்றி செல்லும் நிலை ஏற்படும். சில பாலங்கள் நீரோட்டம் காரணமாக சேதமடைந்தும் விடுகின்றன. அவ்வாறு குல்லுார்சந்தை அணை நிரம்பும் போது அதன் நீரானது சுற்றுப்புறங்களுக்கு பெரிய கால்வாய் வழியாக செல்கிறது. குல்லுார்சந்தை கிராமத்திற்கு செல்லும் ரோடும் இதன் குறுக்கே செல்வதால் தாழ்வான பாலம் உள்ளது. மழை பெய்தால் முழங்கால் அளவு நீர் பாலம் வழியாக ஓடும். விரைவிலேயே வடிந்து விடும். இந்நிலையில் தொடர் நீரோட்டம் காணமாக பாலம் தற்போது சேதமடைந்துள்ளது. அதே போல் கணக்கனேந்தலில் இருந்து ஜோகில்பட்டிக்கு 1 கி.மீ., துாரம் தான். அங்குதான் மேல்நிலைப்பள்ளி உள்ளது. குண்டாற்றில் நீர்வரத்து ஏற்பட்டால் 6 கி.மீ.,க்கு சுற்றி வரவேண்டும். இதே சூழல் பிசிண்டி கிராமத்திலும் உள்ளது. இதற்கான பாலத்தை உயர்த்துவதற்கான பணிகள் ஆமை வேகத்தில் தற்போது தான் துவங்கப்பட்டுள்ளது. இருப்பினும் மழையால் அபாயம் உள்ளது.எழுவணி ஊரில் கிருதுமால் நதி பாலத்தை கடந்தால் சிவகங்கை மாவட்டம் வரும். தரைப்பாலம் சென்ற ஆண்டு வெள்ளத்தில் அடித்து போய்விட்டது. மண்தரையாய் உள்ளதால், மீண்டும் மழை வந்தால் கடக்க முடியாது என அப்பகுதி மக்கள் புலம்புகின்றனர். இது போல மாவட்டத்தின் பல பகுதிகளில் நீர்நிலைகளின் தாழ்வான பாலங்கள் உள்ளன. சேதமடையும் தருவாயில் உள்ளவற்றை கண்டறிந்து விபத்து அபயத்தை தடுக்க வேண்டும். பருவக்காலத்தில் ஆய்வு செய்து அனைத்து பாலங்களையும் உயர்த்தி கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
