UPDATED : அக் 22, 2023 12:00 AM
ADDED : அக் 22, 2023 11:14 AM
சிக்கபல்லாப்பூர் டவுனில் வசிப்பவர் சச்சின், 22. அரசு கல்லுாரியில் பி.ஏ., இரண்டாம் ஆண்டு படிக்கிறார். தாய்லாந்து, இலங்கை ஆகிய நாடுகளில் அடுத்த மாதம் 7ம் தேதி முதல் 13ம் தேதி வரை நடக்கும், செஸ்டோபால் விளையாட்டு போட்டிக்கு, இந்திய அணியில் தேர்வாகி உள்ளார்.இதுகுறித்து சச்சின் கூறியதாவது:
எனது பூர்வீகம் விஜயபுரா மாவட்டம் குந்தகி கிராமம். பல ஆண்டுகளுக்கு முன்பே எனது அப்பா, அம்மா சிக்கபல்லாப்பூருக்கு இடம் பெயர்ந்தனர். அப்பா, அம்மா, அக்கா செங்கல் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை செய்கின்றனர்.என்னை கஷ்டப்பட்டு கல்லுாரியில் படிக்க வைக்கின்றனர். என்னுடைய சிறிய வயதில் கூடைப்பந்து வீரராக ஆசைப்பட்டேன். இதனால் கூடைப்பந்து விளையாட்டில் அதிக கவனம் செலுத்தினேன்.மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, செஸ்டோபால் பயிற்சியாளர் குரு முகமது அகிப்பின் நட்பு கிடைத்தது. செஸ்டோபால் விளையாட்டு குறித்துக் கூறி, அந்த விளையாட்டில் ஈடுபடும்படி என்னை ஊக்குவித்தார். இதனால் கூடைப்பந்து விளையாட்டை விட்டு, செஸ்டோபாலுக்கு மாறினேன். இந்த இரண்டு விளையாட்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. கூடைப்பந்து விளையாட்டில், கூடையில் பந்து போடும் இடத்திற்கு பின்னர் பலகை இருக்கும். ஆனால் செஸ்டோபாலில், பலகை இருக்காது அவ்வளவு தான்.பயிற்சியாளர்கள் குரு முகமது அகிப், அங்குர், அங்கித் ஆகியோர் எனக்கு பெரும் உதவியாக உள்ளனர். கர்நாடகா செஸ்டோபால் அணியில் உள்ளேன். ஆந்திராவின் அனந்தபூரில் நடந்த போட்டியில், தங்க பதக்கம் வென்றேன்.இலங்கை, தாய்லாந்தில் நடக்க உள்ள, செஸ்டோபால் போட்டிக்கு இந்திய அணியில் தேர்வாகி உள்ளேன். இது மகிழ்ச்சி அளிக்கிறது. கல்லுாரி உடற்கல்வி ஆசிரியர்கள் கிரிஜா, ஸ்ரீதரும் எனக்கு எப்போதும் ஆதரவாக இருப்பர். இந்த விளையாட்டின் மூலம் சிக்கபல்லாப்பூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்து தருவேன். இவ்வாறு அவர் கூறினார்.
