நீட் தேர்வை ரத்து செய்யாவிட்டால் ஜல்லிக்கட்டு போல போராட்டம்
நீட் தேர்வை ரத்து செய்யாவிட்டால் ஜல்லிக்கட்டு போல போராட்டம்
UPDATED : அக் 22, 2023 12:00 AM
ADDED : அக் 22, 2023 11:29 AM
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி, தி.மு.க., மாணவரணி சார்பில், 50 நாட்களில், 50 லட்சம் கையெழுத்து வாங்கும் இயக்கம், நேற்று சென்னையில் துவங்கியது.இயக்கத்தை துவக்கி வைத்து, அமைச்சர் உதயநிதி பேசியதாவது:நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது தான் தி.மு.க.,வின் இலக்கு. அதற்காக தொடர்ந்து போராடி வருகிறோம். நீட் தேர்வால் மருத்துவ கல்வியின் தரம் அதிகரிக்கும். பணம் கொடுத்து மருத்துவ கல்லுாரிகளில் சேரும் நிலை இருக்காது. தரமான டாக்டர்கள் கிடைப்பர் என்றனர்.ஆனால், முதுநிலை மருத்துவ படிப்பு சேர்க்கைக்கு, நீட் தேர்வில், ஜீரோ பெர்சன்டைல் எடுத்தாலே, சேர முடியும் என்ற நிலை வந்துள்ளது. நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி நடக்கும் இந்த கையெழுத்து இயக்கத்தை, மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும்.நீட் தேர்வை ரத்து செய்யாமல், தமிழக அரசின் முயற்சிகளை, மத்திய அரசு தொடர்ந்து அலட்சியம் செய்து கொண்டிருந்தால், ஜல்லிகட்டுக்காக நடந்தது போல, வீரியமிக்க போராட்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதை மத்தியஅரசுக்கு எச்சரிக்கையாகவே சொல்லவிரும்புகிறேன்.தமிழக மாணவர்களின் கல்வி உரிமைக்காக, அ.தி.மு.க., இந்த இயக்கத்தில் பங்கு கொள்ள வேண்டும். பா.ஜ.,வுடன் கூட்டணியில் இருந்த போது தான், அ.தி.மு.க.,வால் எதுவும் செய்ய முடியவில்லை. இப்போது, கூட்டணியிலிருந்து வெளியேறி விட்டதாக சொல்லும் அ.தி.மு.க.,வினர், எங்களுடன் இணைந்து நீட் ஒழிப்புக்காக போராட முன்வர வேண்டும். எவ்வளவு வலிமையான கட்சியாக இருந்தாலும், பா.ஜ.,வால் தமிழர்களின் இதயத்தை தொட முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.கோழி முட்டையை காட்டிய உதயநிதி
நீட் தேர்வில், ஜீரோ சதமானம் மதிப்பெண் எடுத்தாலே, முதுநிலை மருத்துவ படிப்புகளில் காலியாக உள்ள இடங்களில் சேரலாம் என்று அறிவிக்கப்பட்டதை கிண்டல் செய்யும் வகையில், நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி, கோழி முட்டையை எடுத்துக் காட்டினார். கடந்த, 2021 சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது, மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் துவங்கப்படாததை கேலி செய்யும் வகையில் எய்ம்ஸ் என, எழுதப்பட்ட செங்கல் ஒன்றை எடுத்துக் காட்டி உதயநிதி பேசியது குறிப்பிடத்தக்கது.
