மருத்துவ சேர்க்கைக்கு சிறப்பு அனுமதி கேட்பு! கூடுதல் தகவலை அனுப்பியது அரசு
மருத்துவ சேர்க்கைக்கு சிறப்பு அனுமதி கேட்பு! கூடுதல் தகவலை அனுப்பியது அரசு
UPDATED : அக் 24, 2023 12:00 AM
ADDED : அக் 24, 2023 11:28 AM
புதுச்சேரி:
மருத்துவ கல்லுாரிகளில் எம்.பி.பி.எஸ்., படிப்புகளுக்கு கடந்த செப்.30ம் தேதிக்குள் மாணவர் சேர்க்கையை நடத்தி முடிக்க, இந்திய மருத்துவ கலந்தாய்வு கமிட்டி அறிவுறுத்தியது. ஆனால், புதுச்சேரியில் மருத்துவ கல்லுாரி மாணவர் சேர்க்கை முடிக்கவில்லை. இதேபோல், பீகார், மேற்குவங்கம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களிலும் இதேபோல் மருத்துவ மாணவர் சேர்க்கை குறித்த காலத்தில் முடிக்கவில்லை.இவ்விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகளை சுட்டி காட்டிய மருத்துவ கலந்தாய்வு கமிட்டி, மாணவர் சேர்க்கைக்கு சிறப்பு அனுமதி கொடுக்காமல் கைவிரித்துவிட்டதால், புதுச்சேரியில் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.புதுச்சேரியில் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு சிறப்பு அனுமதி கேட்டு முதல்வர் ரங்கசாமி மத்திய அரசுக்கு ஏற்கனவே கடிதம் எழுதி இருந்த நிலையில், காலதாமதம் குறித்து மருந்துவ கலந்தாய்வு கமிட்டி, புதுச்சேரி அரசிடம் சில விளக்கங்களை கேட்டுள்ளது.அதனையடுத்து கவுன்சிலிங் காலதாமதம் குறித்து மருத்துவ கலந்தாய்வு கமிட்டிக்கு புதுச்சேரி அரசு சார்பில் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில், இந்தாண்டு அரசு பள்ளி மாணவர்களுக்கான 10 சதவீத உள் ஒதுக்கீட்டிற்கான அனுமதியை, மத்திய அரசு காலதாமதமாக அளித்ததால் மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங் தள்ளி போனது. இதுதொடர்பாக ஏற்கனவே தங்களின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.பொதுவாகவே கடந்த சில ஆண்டுகளாகவே நிர்வாக காரணங்களால், திட்டமிட்டபடி குறித்த நேரத்தில் கவுன்சிலிங் முடிக்கப்படவில்லை. அதேபோல் இந்தாண்டும் பி.டெக்., படிப்புகளுக்கு இறுதி காலக்கெடு செப்.15ம் தேதியுடன் முடிந்த நிலையில் செப்.30ம் தேதி வரை அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் நீடித்துள்ளது. எனவே புதுச்சேரியில் நடந்த மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு சிறப்பு அனுமதியை தர வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதேபோல் பிற மாநிலங்களும் சிறப்பு அனுமதிக்கான காரணங்களை குறிப்பிட்டு கடிதம் அனுப்பியுள்ளன.இருப்பினும் சட்ட சிக்கல்களை மருத்துவ கலந்தாய்வு கமிட்டி ஆராய்ந்து வருகின்றது. இது குறித்து கல்வியாளர்கள் கூறுகையில், மருத்துவ படிப்புகளுக்கு எக்காரணத்தை கொண்டும் செப்.30ம் தேதி பிறகு கவுன்சிலிங் நடத்தக்கூடாது என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே மருத்துவ கலந்தாய்வு அனுமதி விஷயத்தில் தன்னிச்சையாக புதுச்சேரிக்கு சிறப்பு அனுமதி தர முடியாது.அனைத்து மாநிலங்களும் மாணவர் சேர்க்கைக்கு கூடுதல் அவகாசம் கேட்டுள்ளன. எனவே மருத்துவ கலந்தாய்வு கமிட்டி சார்பில் இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில், அனுமதி கோர உள்ளது. புதுச்சேரி அரசும் மருத்துவ கலந்தாய்வு கமிட்டியுடன் இணைந்து சுப்ரீம் கோர்ட்டில் காரணங்களை அடுக்கி சிறப்பு அனுமதி பெற வேண்டும். இதற்கான முன் ஏற்பாடுகளை புதுச்சேரி அரசு, சட்ட துறையை முடுக்கிவிட்டு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றனர்.
