பள்ளி அருகே தொடரும் விபத்துகள் வேகத்தடை அமைக்க கோரிக்கை
பள்ளி அருகே தொடரும் விபத்துகள் வேகத்தடை அமைக்க கோரிக்கை
UPDATED : அக் 24, 2023 12:00 AM
ADDED : அக் 24, 2023 11:30 AM
திட்டக்குடி:
தொழுதுாரில் பள்ளிகள் இயங்கி வரும் முக்கிய சாலையில் நடந்துவரும் தொடர் விபத்துகளால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.கடலுார் மாவட்டம், திட்டக்குடி அடுத்த தொழுதுாரில் அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளி, மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தனியார் பள்ளி உள்ளிட்டவை அமைந்துள்ள முக்கிய சாலையில், கடந்த சில மாதங்களில் அடுத்தடுத்து விபத்துகளும், உயிரிழப்புகளும் நடப்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சுற்றுபுற கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், மாணவர்கள் வந்து செல்கின்றனர். போக்குவரத்து நிறைந்த பகுதியாக உள்ள இச்சாலையில் கடந்த சில மாதங்களில் 10க்கும் மேற்பட்ட விபத்துகளில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்தனர். அதி வேகமாக இயங்கும் கனரக வாகனங்கள் விபத்துக்கு முக்கிய காரணமாக அமைகின்றன.எனவே, தொழுதுார் கிராம சாலையினை அகலப்படுத்தவும், பள்ளி, அரசு மருத்துவமனை அமைந்துள்ள இடங்களில் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த வேகத்தடை அமைக்கவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து ஊராட்சி வார்டு உறுப்பினர் மணிவண்ணன் கூறுகையில், தொழுதுார் சாலையில் ஏற்படும் விபத்துகளை தடுக்க நெடுஞ்சாலைத்துறை சார்பில் அறிவிப்பு பலகை, தேவைப்படும் இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டும். அதிவேக வாகனங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்றார்.
