UPDATED : அக் 25, 2023 12:00 AM
ADDED : அக் 25, 2023 08:12 AM
மதுரை:
கிராம உதவியாளர்களுக்கு நிர்வாகம், நிலஅளவை, அலுவலக பணி குறித்த பயிற்சி அளிக்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு கிராம உதவியாளர் முன்னேற்ற சங்கத்தினர் மதுரையில் வருவாய்த்துறை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரனிடம் மனு அளித்தனர்.இச்சங்க மாநில தலைவர் கணேஷ்வதி, பொதுச் செயலாளர் சந்தியா, பொருளாளர் மகாலட்சுமி அளித்துள்ள மனு:
எழுதப்படிக்கவும், சைக்கிள் ஓட்டவும் தெரிந்திருக்க வேண்டும் என்றிருந்த கிராம உதவியாளர் பணியில் கலை, அறிவியல் பட்டதாரிகள், முதுகலை, பொறியியல் படித்தோரும் பணியாற்றுகின்றனர். அவர்களை மேம்படுத்தும் வகையில், கிராம நிர்வாகம், நிலஅளவை, அலுவலக பணி குறித்த பயிற்சி அளிக்க வேண்டும். கிராம உதவியாளர்கள் பணியின் பன்முகத் தன்மையை கருதி, அவர்களுக்கும் ஊராட்சி செயலாளர்களின் ஊதியத்திற்கு இணையாக வழங்க வேண்டும்.அலுவலக உதவியாளரில் இருந்து பதிவுரு எழுத்தர் பதவி உயர்வுக்கு 5 ஆண்டுகள், வி.ஏ.ஓ.,வில் இருந்து உதவியாளராக 6 ஆண்டுகள் என உள்ளது. ஆனால் கிராம உதவியாளரில் இருந்து வி.ஏ.ஓ., ஆக 10 ஆண்டுகள் என்ற பாகுபாடான நடைமுறையை மாற்றி, ஐந்தாண்டாக குறைக்க வேண்டும்.கிராம உதவியாளர்களுக்கு இளநிலை உதவியாளர், தட்டச்சர், வி.ஏ.ஓ., பதிவுரு எழுத்தர் பதவிகளுக்கு பொருந்துமாறு பணியை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராம உதவியாளர்கள் பலர் உயர்நிலை அலுவலர்களுக்கு கார் டிரைவராகவும் பணியாற்றுகின்றனர். அவர்கள் ஐந்தாண்டு பணிமுடித்ததும், டிரைவர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும்.கிராம உதவியாளர்களின் வாரிசுகளுக்கு 1965 முதல் கருணை அடிப்படையில் பணி வழங்கப்பட்டது. 2023 ல் இருந்து சிறப்பு காலமுறை ஊதியத்தில் உள்ள உதவியாளர்களுக்கு இது பொருந்தாது என கூறப்பட்டுள்ளது.அவர்களுக்கும் கருணைப் பணிநியமன முறை பொருந்தும் என உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.
