விளையாட்டு மைதானம் இல்லாததால் ஒரு கி.மீ., பயணிக்கும் அவலம்
விளையாட்டு மைதானம் இல்லாததால் ஒரு கி.மீ., பயணிக்கும் அவலம்
UPDATED : அக் 25, 2023 12:00 AM
ADDED : அக் 25, 2023 10:29 AM
தேனி:
குன்னுார், அம்மச்சியாபுரம் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளிகள், உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகியவற்றில் விளையாட்டு மைதானங்கள் இல்லாததால் மாணவர்கள் தனித்திறனை வளர்க்க முடியாமல் தவிக்கின்றனர்.தேனி மதுரை ரோட்டில் குன்னுார் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 244 மாணவ, மாணவியர்கள் படிக்கின்றனர். பள்ளியில் உள்ள குறுகிய மைதானத்தில் கபடி மட்டுமே விளையாட முடியும்.கடந்த ஆண்டு ஆய்வுக்கு வந்த அமைச்சர் கயல்விழியிடம் விளையாட்டு மைதானம் அமைக்க கோரிக்கை விடுத்தனர். அப்போது உடனிருந்தா எம்.எல்.ஏ., மகாராஜன் மைதானம் அமைத்து தருவதாக வாக்குறுதி அளித்தும் இதுவரை மைதானம் அமைக்கவில்லை. அம்மச்சியார்புரம் மேல்நிலைப் பள்ளியிலும் மைதானம் இல்லை. இதனால் மாணவர்களின் விளையாட்டுக் கனவு, நனவாகுமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.உத்தமபாளையம் அங்காடிதெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 440 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இவர்களுக்கு 15 ஆண்டுகளாக விளையாட மைதானம் இன்றி ஆட்டோவில் ஒரு கி.மீ., சென்று உத்தமபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மைதானத்தில் விளையாடி வருகின்றனர். இப்பள்ளியில் ஈட்டி எறிதல், குண்டு எறிதலில் சாதனை படைக்கும் ஆற்றல் உள்ள மாணவர்கள் முறையான பயிற்சி எடுக்க மைதானங்கள் இன்றி தவித்து வருகின்றனர். இப்பள்ளிகளில் அடிப்படை வசதிகளும் இன்றி தவிக்கின்றனர்.இன்று ஆய்வுக்கு வரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, இப்பள்ளிகளில் ஆய்வு செய்து மைதானம், கழிப்பறைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
