எழுத்தாளர்கள் நிராகரிப்பு! புத்தக திருவிழா கமிட்டி மீது கடும் அதிருப்தி
எழுத்தாளர்கள் நிராகரிப்பு! புத்தக திருவிழா கமிட்டி மீது கடும் அதிருப்தி
UPDATED : அக் 25, 2023 12:00 AM
ADDED : அக் 25, 2023 10:37 AM
ஊட்டி:
ஊட்டியில் நடப்பாண்டு ஏப்., மாதம், முதல் புத்தகதிருவிழா, 10 நாட்கள் நடந்தது.அந்த நிகழ்ச்சிகளில் பேச, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பேச்சாளர்கள்; எழுத்தாளர்கள் அழைக்கப்பட்டனர். அதில், நீலகிரியை சேர்ந்த ஒருவர் கூட இல்லை. அந்த தகவல் அப்போதைய மாவட்ட கலெக்டர் அம்ரித்துக்கு தெரியவந்தது. அவர், வருவாய் துறை அதிகாரிகளை அனுப்பி, முக்கிய எழுத்தாளர்களை நிறைவு விழாவுக்கு வரும்படி அழைப்பு விடுத்தார். அப்போது, அனைவர் மத்தியிலும் அதிருப்தி நிலவியது.தற்போது, கடந்த, 20ம் தேதி முதல் ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில், நீலகிரி புத்தக திருவிழா நடந்து வருகிறது. அதில், நாள்தோறும் நடக்கும் நிகழ்ச்சியில் பேச, மாநில முழுவதும் பல எழுத்தாளர்கள்; பேச்சாளர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் சொற்பொழிவில் உள்ளூர் மக்கள்; மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.மீண்டும் நிராகரிப்பு
அதே வேளையில், இம்முறையும், நீலகிரி எழுத்தாளர்கள்; பேச்சாளர்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை. அவர்கள் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளனர். ஊட்டியில், நிர்மால்யா, சூசன்டேனியல் ஆகிய இரு சாகித்ய அகாடமி விருதாளர்கள்; பிற விருதுகளை பெற்ற பல எழுத்தாளர்கள்; ஆய்வாளர்கள்; கல்வியாளர்கள் வாழ்ந்து வருகின்றனர் என்பதை, புத்தக திருவிழா கமிட்டி, இம்முறையும் மறந்துள்ளது வியப்பளிப்பதாக உள்ளது.நிகழ்ச்சிக்கு அதிகளவில் பள்ளி மாணவர்களை அழைத்து வரும் நிலையில், அவர்களுக்கு நீலகிரியின் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உரையாற்ற, உள்ளூரை சேர்ந்த ஒருவர் கூட அழைக்கப்படவில்லை என்பதும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து மாநில முதல்வருக்கு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.நீலகிரி ஆவண காப்பக இயக்குனர் வேணுகோபால் கூறுகையில், மாணவர்கள், தாங்கள் கல்வி பயிலும் மாவட்டங்களின் சிறப்பை அறிய செய்யவும், படிக்கும் பழக்கத்தை வழக்கமாக்கி கொள்ளவும், புத்தக திருவிழா நடத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இந்நிலையில், ஊட்டியில் நடந்த இரு புத்தக திருவிழாவிலும், நீலகிரியின் தகவல்களை மாணவர்கள் அறிய முடியாத சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. விழா நிகழ்ச்சியில், உள்ளூர் பேச்சாளர்கள்; எழுத்தாளர்கள்; ஆய்வாளர்கள் நிராகரிக்கப்பட்டதை ஏற்க முடியாது, என்றார்.
