UPDATED : அக் 26, 2023 12:00 AM
ADDED : அக் 26, 2023 10:37 AM
பொள்ளாச்சி:
உடுமலை மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது.பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில் நவராத்திரி விழா கடந்த, 10 நாட்களாக விமரிசையாக கொண்டாடப்பட்டது. விழாவில் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, நேற்றுமுன்தினம் விஜயதசமி விழா நடந்தது.விஜயதசமி விழாவையொட்டி, பொள்ளாச்சி லட்சுமி நரசிம்மர் கோவிலில், பெற்றோர் மழலைகளை அழைத்துச்சென்று, நாவில் ஓம் என அர்ச்சகர்கள் மூலமாக எழுதி, சர்க்கரை, பச்சரிசி மற்றும் எழுத்துப்பலகையில், அ என எழுதி கல்வி படிப்பை துவக்க ஆர்வம் காட்டினர். பொள்ளாச்சி டி. கோட்டாம்பட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதரராஜப்பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து பெற்றோர், குழந்தைகளை அழைத்து வந்து வித்யாரம்பம் எழுதினர்.பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில் சிறப்பு அபிஷேக், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, பெற்றோர் ஆர்வமாக பங்கேற்று, குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்தனர்.உடுமலை
பள்ளி செல்லும் வயதுள்ள குழந்தைகளுக்கு, பள்ளிக்கு அனுப்பும் முன்பு, விஜயதசமி நாளில் பெற்றோர் கோவில்களில், வித்யாரம்பம், செய்து வைக்கின்றனர். விஜயதசமி நாளான நேற்று, உடுமலை சுற்றுப்பகுதியிலும், இந்நிகழ்ச்சி நடந்தது.உடுமலை, பெரிய கடை வீதி நவநீத கிருஷ்ணசாமி கோவிலில், லட்சுமி ஹயக்ரீவர் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது. பெற்றோர் குழந்தைகளை அழைத்து வந்து அவர்களுக்கு, ஹயக்ரீவர் சன்னதி முன்பு வித்யாரம்பம் நடத்தினர். அதேபோல், பிரசன்ன விநாயகர் கோவிலிலும் விநாயகர் சன்னதி முன்பு வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது.குழந்தைகள், கல்விக்கு உகந்த சரஸ்வதி தேவி மற்றும் விநாயகரை வழிபட்டு பாடல்களை பாடினர். குழந்தைகளின் நாவில், ஓம் எழுதியும், கல்வி துவங்குவதற்கான சிறப்பு வழிபாடுகளும் நடந்தது. கோவில்களில், நவராத்திரி கொலுவின் முக்கிய அம்சமான விஜயதசமியை, லட்சுமி சரஸ்வதி, பார்வதி தேவியருக்கு நன்றி செலுத்தும் வகையில், சிறப்பு வழிபாட்டு பூஜைகளும் நடந்தது.வால்பாறை
வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் விஜயதசமியை முன்னிட்டு நேற்று நடந்த நிகழ்ச்சியில், கோவில் அர்ச்சகர் கண்ணன் குழந்தைகள் நாவில் அகரம் எழுதினர். பின்னர் கோவிலில் குழந்தைகளுக்காக சிறப்பு பூஜைகளும் நடந்தன.
