வாக்காளர் பட்டியலில் கல்லுாரி மாணவர்கள் சேர்ப்பு பரிசு வழங்க திட்டம்
வாக்காளர் பட்டியலில் கல்லுாரி மாணவர்கள் சேர்ப்பு பரிசு வழங்க திட்டம்
UPDATED : நவ 27, 2023 12:00 AM
ADDED : நவ 27, 2023 09:58 AM
உடுமலை:
அனைத்து மாணவர் பெயரையும் வாக்காளர் பட்டியலில் இடம் பெறச்செய்யும் கல்லுாரிக்கு, மாவட்ட நிர்வாகம் சார்பில் பரிசு வழங்கப்படவுள்ளது.வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்த பணி, கடந்த அக்., 27ல் துவங்கி நடைபெற்று வருகிறது. வரும் ஜனவரி 1ம் தேதி 18 வயது பூர்த்தி அடையும் இளைஞர் அனைவரையும், பட்டியலில் சேர்க்க, திருப்பூர் மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது குறித்து, கல்லுாரி மாணவர்களுக்கான ஆலோசனைக்கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராஜ், தேர்தல் தாசில்தார் தங்கவேல் மற்றும் தேர்தல் பிரிவினர் பங்கேற்றனர்.திருப்பூர் மாவட்டத்திலுள்ள அரசு, தனியார் கலை அறிவியல் கல்லுாரி, பொறியியல் கல்லுாரி, பாலிடெக்னிக் முதல்வர்கள் 25 பேர் பங்கேற்றனர். கல்லுாரியில் படிக்கும் அனைத்து மாணவர்களும் வாக்காளர் பட்டியலில் இணைக்கப்பட வேண்டும் அல்லது வாக்காளராக இணைய விண்ணப்பித்திருக்க வேண்டும். வரும் 2024 ஏப்., 1, ஜூலை 1, அக்., 1ம் தேதி, 18 வயது பூர்த்தியடையும் மாணவர்களிடமிருந்தும் இப்போதே விண்ணப்பங்கள் வாங்கலாம்.முன்னரே அளிக்கப்படும் படிவங்கள் பரிசீலிக்கப்பட்டு, அந்தந்த காலாண்டு துவக்கத்தில் பட்டியலில் பெயர் சேர்க்கப்படும். அனைத்து மாணவர் பெயரையும் வாக்காளர் பட்டியலில் இடம்பெறச்செய்யும் கல்லுாரிக்கு, மாவட்ட நிர்வாகம் சார்பில் பரிசு வழங்கப்படும் என, அறிவுறுத்தப்பட்டது.
