புத்தகங்களே இல்லாமல் எப்படி போட்டிகளை நடத்த முடியும்!
புத்தகங்களே இல்லாமல் எப்படி போட்டிகளை நடத்த முடியும்!
UPDATED : நவ 28, 2023 12:00 AM
ADDED : நவ 28, 2023 09:41 AM
ராமநாதபுரம்:
புத்தகங்களே இல்லாமல் வானவில் இலக்கிய மன்ற போட்டிகளை எப்படி நடத்த முடியும் என்று அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் குமுறுகின்றனர்.தமிழகத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்கம் சார்பில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் வானவில் மன்றம் என்ற இலக்கிய மன்றம் சார்பில் போட்டிகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.இதற்காக தேன்சிட்டு இதழ் என்ற புத்தகம் வெளியிடப்பட்டு அதன் அடிப்படையில் மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, கவிதை புனைதல், சிறார் திரைப்படப் போட்டிகள், கதை விமர்சனம், தனி நபர் நடிப்பு, குறும்படம் தயாரித்தல், வினாடி வினா போட்டிகள், அறிவியல் கண்காட்சி, அறிவியல் செயல்திட்டம், அறிவியல் நாடகம் ஆகியவைகள் நடத்த உத்தரவிட்டுள்ளனர். அரசுப்பள்ளிகளுக்கு 6 முதல் 9ம் வகுப்பு படிப்பவர்களுக்கு தேன்சிட்டு இதழ் 15 நாட்களுக்கு ஒரு முறை வழங்கப்பட்டு வருகிறது.4, 5ம் வகுப்பு மாணவர்களுக்கு புது ஊஞ்சல் இதழ் 15 நாட்களுக்கு ஒரு முறை வழங்கப்பட்டு வருகிறது. இந்த இதழ்கள் எதுவும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்கப்படுவதில்லை. ஆனால் அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் போட்டிகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.புத்தகங்களே வழங்காமல் எப்படி போட்டிகளை நடத்த முடியும் என உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் குமுறுகின்றனர். புத்தகங்களை முறையாக வழங்கி போட்டிகளை நடத்த வேண்டும் என கோரியுள்ளனர்.
