வேளாண் மாணவர்களுக்கு தரமான விதை உற்பத்தி குறித்து விளக்கம்
வேளாண் மாணவர்களுக்கு தரமான விதை உற்பத்தி குறித்து விளக்கம்
UPDATED : நவ 30, 2023 12:00 AM
ADDED : நவ 30, 2023 10:13 AM
உடுமலை:
உடுமலை அருகே, வேளாண் மாணவர்களுக்கு, விதைச்சான்றுத்துறை சார்பில் களப்பயிற்சி முகாம் நடந்தது.விவசாயத்தின் முக்கிய அடிப்படை காரணியான, விதையின் முக்கியத்துவம், விதைச்சான்று நடை முறைகள், விதைப்பண்ணை அமைப்பது மற்றும் தரமான விதை உற்பத்தி குறித்து, வேளாண்மை இளங்கலை இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு, திருப்பூர் மாவட்ட விதைச்சான்று உதவி இயக்குநர் மாரிமுத்து பயிற்சியளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:
வேளாண் பயிர்களில் மகசூல் அதிகரிப்பதற்கு, உரம், பூச்சி மருந்து, நீர்ப்பாசனம் போன்ற பல இடு பொருட்கள் இருந்தாலும், விதைத்தேர்வு என்பது மிக முக்கியமான, அடிப்படை இன்றியமையாத காரணியாகும்.சான்று பெற்ற விதைகளை விவசாயிகள் பயன்படுத்துவதால், அதிக முளைப்புத்திறன், சீரான வளர்ச்சி, ஒரே நேரத்தில் பூத்து, காய்த்து அறுவடைக்கு தயாராவது, பூச்சி நோய் எதிர்ப்புத் திறனோடு, அதிக மகசூல் பெறவும் முடியும்.உடுமலை தாலுகா, ஆண்டிய கவுண்டனுார் கிராமத்தில், உளுந்து பயிரின் வம்பன் - 8, வம்பன் - 9, வம்பன் -10 மற்றும் வம்பன் - 11 ரகங்களில், விதைப்பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. ரகத்திற்கு ஏற்ப, பயிரின குணாதிசியங்கள், நோய் எதிர்ப்புத்தன்மை மாறுகிறது. மகசூலில் வேறுபாடு காணப்படும். விதைச்சான்றுத்துறை அலுவலர்கள் கண்காணிப்பில் அமைக்கப்பட்டுள்ள, இந்த விதைப்பண்ணையில் சான்று விதைகள் உற்பத்தி செய்து, விவசாயிகளுக்கு வழங்கப்படும்.பயறு வகைப்பயிர்களின் தன் மகரந்தச்சேர்க்கை நடைபெறுவதால், பூப்பருவம் மற்றும் முதிர்ச்சிப்பருவத்தில் வயலாய்வு மேற்கொள்ளப்பட்டு, வயல் தரத்தில் தேர்வு செய்யப்படும் விதைப்பண்ணைகள் அறுவடைக்கு அனுமதிக்கப்படுகிறது.அறுவடை செய்யப்பட்ட விதை குவியல்கள், அரசு அனுமதி பெற்ற விதை சுத்திகரிப்பு நிலையங்களில் சுத்தி செய்யப்பட்டு, மாதிரிகள் அரசு அங்கீகாரம் பெற்ற ஆய்வகத்தில் பகுப்பாய்வு செய்யப்படுகிறது. முளைப்புத்திறன், பிற ரக கலவன்கள், ஈரப்பதம், புறத்துாய்மை இனங்களின் முடிவு பெறப்பட்டு, விதைக்குவியல்கள் தேர்வு செய்யப்படும்.அதற்கு பின், சான்றட்டை பொருத்தப்பட்டு, தரமான விதைகளாக விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்படும். வேளாண் இறுதியாண்டு பயிலும் மாணவர்கள், விதைச்சான்று நடைமுறைகள் மற்றும் விதை உற்பத்தி குறித்து அறிந்து கொண்டு, விவசாயிகள் சான்று பெற்ற விதைகளை பயன்படுத்தி, அதிக மகசூல் பெற விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு தெரிவித்தார்.இம்முகாமில், விதைச்சான்று அலுவலர் ஷர்மிளா, உதவி விதை அலுவலர்கள் கிருபாகரன், சந்தான கிருஷ்ணன் மற்றும் விதை உற்பத்தியாளர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
