பள்ளி மாணவர்களிடம் நீட் எதிர்ப்பு கையெழுத்து: பா.ஜ., போராட்டம்
பள்ளி மாணவர்களிடம் நீட் எதிர்ப்பு கையெழுத்து: பா.ஜ., போராட்டம்
UPDATED : டிச 01, 2023 12:00 AM
ADDED : டிச 02, 2023 09:41 AM
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி உள்ளிட்ட அரசு பள்ளி மாணவ - மாணவியரிடம், நீட் தேர்வு எதிர்ப்பு கையெழுத்தை, அங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் பெற்று வருகின்றனர். தி.மு.க.,வினரின் துாண்டுதலில் இதைச் செய்கின்றனர்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பா.ஜ., தலைவர் விஜயகுமார் மற்றும் பா.ஜ., சிறுபான்மை பிரிவு தேசிய செயலர் வேலுார் இப்ராஹிம் தலைமையில், புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யாவிடம் புகார் அளிக்க சென்றனர்.கலெக்டர் அவர்களை சந்திக்க வர காலதாமதமானதால், பா.ஜ.,வினர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின், அங்கு வந்த கலெக்டர் மெர்சி ரம்யா, பா.ஜ., நிர்வாகிகள் அளித்த புகார் மனுவை பெற்றார். இதையடுத்து அக்கட்சியினர் கலைந்து சென்றனர்.பின், பா.ஜ., தேசிய செயலர் வேலுார் இப்ராஹிம் நிருபர்களிடம் கூறியதாவது:
நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று தெரிந்தும், தி.மு.க.,வினர் கையெழுத்து இயக்கம் என்ற பெயரில், நாடகம் நடத்துகின்றனர். கையெழுத்து இயக்கத்தை அவர்கள் அரசியல் கட்சியினர், பொதுமக்கள், கல்லுாரி மாணவர்களிடம் பெறலாம்; கட்சி தொண்டர்களிடம் பெறலாம். அதை விடுத்து, அரசு பள்ளிகளில் படிக்கும் இரண்டாம் வகுப்பு, மூன்றாம் வகுப்பு மாணவ மாணவியரிடம், நீட் தேர்வு ரத்துக்கு கையெழுத்து வாங்கப்படுகிறது. இதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று, கலெக்டரிடம் புகார் மனு அளித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
