துணைவேந்தர் நியமன தீர்ப்பு மேற்கு வங்க கவர்னர் வரவேற்பு
துணைவேந்தர் நியமன தீர்ப்பு மேற்கு வங்க கவர்னர் வரவேற்பு
UPDATED : டிச 03, 2023 12:00 AM
ADDED : டிச 03, 2023 05:05 PM
கோல்கட்டா:
பல்கலை துணைவேந்தர்களை நியமிக்கும் விவகாரத்தில் கவர்னர்களே முடிவுகளை எடுக்கலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை, மேற்கு வங்க கவர்னர் சி.வி. ஆனந்த போஸ் வரவேற்றுள்ளார்.மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.மோதல்
இங்குள்ள 31 பல்கலைகளில் முழு நேர துணைவேந்தர்களின் பதவிக்காலம் இந்த ஆண்டில் முடிவடைந்தது. இதில், 11 பல்கலைகளுக்கு இடைக்கால துணைவேந்தர்களை மாநில கவர்னர் ஆனந்த போஸ் நியமிக்க துவங்கினார். இதனால், மாநில அரசுக்கும், கவர்னருக்கும் மோதல் ஏற்பட்டது.துணைவேந்தர் நியமன விவகாரத்தில் கவர்னர் தன்னிச்சையாக செயல்படுவதாக மாநில அரசு குற்றஞ்சாட்டியது. துணைவேந்தர்கள் நியமனத்தில் உள்ள முட்டுகட்டைகளை சரிசெய்ய முதல்வருடன் பேசும்படி, கவர்னரை உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.இதற்கிடையே, கேரளாவில் உள்ள கண்ணுார் பல்கலை துணைவேந்தர் நியமனம் தொடர்பாக சமீபத்தில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், &'ஒரு மாநிலத்தில் உள்ள பல்கலைகளுக்கு பதவி வழியாக அங்குள்ள கவர்னரே வேந்தராக உள்ளார். பல்கலை தொடர்பான அனைத்து விஷயங்களிலும் மாநில அமைச்சரவையை சாராமல் வேந்தர் என்ற முறையில் அவரே சுதந்திரமாக முடிவு எடுக்கலாம் என கூறியிருந்தது.பரிந்துரை
இந்த தீர்ப்பை மேற்கு வங்க கவர்னர் ஆனந்த போஸ் வரவேற்றுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
துணைவேந்தர்கள் நியமனத்தில் வேந்தரான கவர்னரின் சட்டப்பூர்வ நிலைப்பாட்டை உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது. துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் வேந்தர்களுக்கு மட்டுமே உள்ளது; இந்த விஷயத்தில் எந்த மாநில அரசும் தலையிட முடியாது என்பதை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தெளிவாக எடுத்துரைக்கிறது.துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக மாநில உயர்கல்வித் துறை வழங்கியுள்ள பரிந்துரைகள் சட்ட விரோதமானவை. துணைவேந்தர் பதவிக்கு மாநில அரசு பரிந்துரைத்த ஒரு சிலரின் பெயர்களை கூட நான் ஏற்றுக் கொண்டேன். அதேசமயம், வயது, தகுதி, பணிமூப்பு அடிப்படையில் ஒரு சிலரை தேர்ந்தெடுத்தேன். இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
