திருமலை நாயக்கர் மகாலில் உருவாகிறது தீமாட்டிக் மியூசியம்!
திருமலை நாயக்கர் மகாலில் உருவாகிறது தீமாட்டிக் மியூசியம்!
UPDATED : டிச 04, 2023 12:00 AM
ADDED : டிச 04, 2023 10:04 AM
மதுரை:
மதுரை மன்னர் திருமலை நாயக்கர் மகாலில் உள்ள ஓலைச்சுவடி, கல்வெட்டுகளை புத்தகமாக வெளியிடும் வகையில் முதல்முறையாக தீமாட்டிக் மியூசியம் மத்திய அரசின் நிதியுதவியின் கீழ் உருவாக்கப்பட்டு வருகிறது.மகாலின் தரைத்தளம் முழுவதும் பழுதடைந்ததால் மாநில அரசின் ரூ.3 கோடி நிதியின் கீழ் தளம் சீரமைப்பு பணி நடக்கிறது. சுற்றுலா பயணிகளுக்கு தடையின்றி ஆங்காங்கே இடைவெளி விடப்பட்டு தரைத்தள சீரமைப்பு பணி நடந்து வருகிறது.பிரமிக்க வைக்கும் துாண்களுடன் பழங்கால கற்சிற்பங்கள், கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகளும் இங்கு பராமரிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன. கலை, இலக்கியம், மருத்துவம், ஆராய்ச்சி என ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகள் உள்ளன. இவற்றை கொண்டு தமிழகத்தில் முதல்முறையாக தீமாட்டிக் மியூசியம் உருவாக்கப்பட உள்ளது. மத்திய அரசின் சி.எஸ்.ஆர். திட்டத்தின் கீழ் மியூசியம் அமைக்கவும், நாடகசாலை பராமரிப்புக்கும் ரூ.7 கோடி வழங்கப்பட்டுள்ளது. தற்போது நாடகசாலை கூரையில் வண்ணம் பூசும் பணி, மராமத்து பணிகள் நடக்கின்றன.மியூசியத்திற்காக 2000 சதுர அடி ஹால் தேர்வு செய்யப்பட்டு சீரமைப்பு பணிகள் நடக்கின்றன. இங்குள்ள ஓலைச்சுவடிகள், கல்வெட்டுகளை படித்தும், ஸ்கேன் செய்தும் புத்தகங்களாக தொல்லியல் துறை வெளியிட உள்ளது. மியூசியமாக மட்டுமின்றி நுாலகமாகவும் பயன்படுத்தும் வகையில் புத்தகங்களை படிக்கும் வசதியும் செய்யப்படும். புத்தகங்களும் விற்கப்படும்.மகாலுக்கு உள்ளே செல்ல பயணிகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த மியூசியம் மற்றும் நுாலகத்தை மகாலின் பக்கவாட்டு பகுதி வழியாக வாசகர்கள் கடந்து செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. நுாலகம் அமைத்தபின் வாசகர்கள் மைய நுாலகத்தை போல பயன்படுத்தலாம்.
