மாணவர்கள் பாதுகாப்பில் கவனம்: பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு
மாணவர்கள் பாதுகாப்பில் கவனம்: பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு
UPDATED : டிச 04, 2023 12:00 AM
ADDED : டிச 04, 2023 10:42 AM
கடலுார்:
கடலுார் மாவட்டத்தில், மாணவர்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும் என, பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவிடப்பட்டுள்ளது.கடலுார் மாவட்டத்தில் மிக்ஜாம் புயல் பாதிப்பை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறது. மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் என, 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் இயங்கி வருகிறது.இப்பள்ளிகளில், புயல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மாணவர்கள் பாதுகாப்பு விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, முதன்மை கல்வி அலுவலகம் அறிவுறுத்தி, சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.அதில், மாணவர்களை பாதுகாப்பான வகுப்பறைகளில் அமர வைக்க வேண்டும், பள்ளி வளாகங்களில் மழைநீர் தேங்கி நின்றால் அதனை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். வகுப்பறைகளில் மின் கசிவு ஏற்பட்டால் உடனடியாக சரி செய்ய வேண்டும். புயலால் பாதிக்கப்படும் பொதுமக்கள் தங்குவதற்கும் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
