UPDATED : டிச 04, 2023 12:00 AM
ADDED : டிச 04, 2023 06:55 PM
சென்னை:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் நிலவுவதால், சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும், அடிக்கடி திடீர் மழை பெய்கிறது.மழை பாதிப்பு ஏற்படும் நாட்களில், முன் எச்சரிக்கையாக, பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது. இதுகுறித்து, பள்ளிக்கல்வி அதிகாரிகளும், கலெக்டர் அலுவலக அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றனர். ஆனால், கல்லுாரிகளுக்கு மட்டும் விடுமுறை விடுவதற்கு, உயர்கல்வி துறை சார்பில், உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.கடந்த வாரம் சென்னையில் பல இடங்களில் இரவு மற்றும் அதிகாலை மழையால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. அப்போது, பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டது. கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்கவில்லை. அதேபோல், சென்னையில் மழை பெய்து பாதிப்பு ஏற்படும்போது, புறநகர்களில் உள்ள கல்லுாரிகளுக்கு, மாநகர மாணவ - மாணவியர் செல்ல முடியாத நிலை உள்ளது.இதுபோன்ற சூழலில், அருகில் உள்ள மாவட்ட கல்லுாரிகளில் மழை இல்லாவிட்டாலும், மாநகர பகுதிகளில் இருந்து அதிக மாணவர்கள் வர முடியாத நிலையை கருத்தில் கொண்டு, விடுமுறை அறிவிக்க வேண்டும். இதற்கும், உயர்கல்வித்துறை உரிய வழிகாட்டுதல் வழங்காமல் அலட்சியமாக செயல்படுவதாக, மாணவ - மாணவியர் மற்றும் பெற்றோர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
