UPDATED : டிச 04, 2023 12:00 AM
ADDED : டிச 04, 2023 06:56 PM
ராய்ச்சூர்:
எஸ்.ஐ., மறுதேர்வு தேதியை தள்ளிவைக்கும்படி, முதல்வர் சித்தராமையாவுக்கு, காங்கிரஸ் எம்.எல்.ஏ., பசனகவுடா துர்விஹால் கடிதம் எழுதி உள்ளார்.கர்நாடகாவில் காலியாக உள்ள 545 எஸ்.ஐ., பணியிடங்களை நிரப்ப, பா.ஜ., ஆட்சியில் கடந்த 2021ல் தேர்வு நடந்தது. இந்த தேர்வில் பெரிய அளவில் முறைகேடு நடந்தது. பணம் கொடுத்து தேர்வு எழுதியவர்கள் வெற்றி பெற்றனர். ஆள்சேர்ப்பு பிரிவு முன்னாள் கூடுதல் டி.ஜி.பி., அம்ருத்பால் உட்பட 80 பேர் கைது செய்யப்பட்டனர்.இதனால் மறுதேர்வு நடத்தப்படுமென, மாநில அரசு அறிவித்தது. இதை எதிர்த்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. மனு மீதான விசாரணை முடிந்த நிலையில், அரசு உத்தரவு செல்லும் என, கடந்த மாதம் நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. தனியார் அமைப்பு மூலம் மறுதேர்வு நடத்தவும், நீதிமன்றம் உத்தரவிட்டது.மறுதேர்வு நடத்தும் பொறுப்பு, கர்நாடகா தேர்வு ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. வரும் 23ம் தேதி மறுதேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு தேர்வர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தேர்வு குறைந்த காலமே கொடுக்கப்பட்டு இருப்பதாக ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.இந்நிலையில், ராய்ச்சூரின் மஸ்கி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., பசனகவுடா துர்விஹால், முதல்வர் சித்தராமையா எழுதிய கடிதத்தில், எஸ்.ஐ., மறுதேர்வு தேதியை தள்ளி வைக்க வேண்டும்.தேர்வுக்கு படிக்க குறைந்தது, மூன்று மாதங்கள் அவகாசம் தேவை. உடனடியாக தேர்வு நடத்தினால், தேர்வுக்கு கண்டிப்பாக தயாராக முடியாது. தேர்வர்கள் எதிர்காலத்தை, கருத்தில் கொள்ள வேண்டும் என, குறிப்பிட்டு உள்ளார்.
