UPDATED : டிச 06, 2023 12:00 AM
ADDED : டிச 06, 2023 11:05 AM
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரக திறனாய்வு தேர்வு எழுத 2291 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். டிச.16ல் எழுத்துத்தேர்வு நடக்கிறது.கிராமங்களில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஊரகத் திறனாய்வு தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இத்தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை ஆண்டுக்கு ரூ.1000 உதவித் தொகை வழங்கப்படுகிறது.இதன்படி நடப்பாண்டில் டிச.16 ல் எழுத்துத்தேர்வு காலை 9:00 முதல் மதியம் 1:00 மணி வரை நடைபெற உள்ளது. இத்தேர்வு எழுத மாவட்டத்தில் 148 பள்ளிகளில் இருந்து 2291 மாணவர்கள் விண்ணபித்துள்ளனர்.ராமநாதபுரம்-2, பரமக்குடி, முதுகுளத்துார், ஆர்.எஸ்.மங்கலம், கமுதி, உச்சிபுளி, திருவாடாடனை, சாயல்குடி ஆகிய ஒன்பது இடங்களில் தேர்வு நடைபெற உள்ளது. மாணவர்கள் அவர்களது பள்ளி தலைமையாசிரியர் உதவியுடன் ஹால்டிக்கெட்டை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என கல்வித்துறை அதிகாரிகள் கூறினர்.
