கடல் கொந்தளிப்பு குறையாததால் வெள்ளம் வடியவில்லை: வல்லுனர் விளக்கம்
கடல் கொந்தளிப்பு குறையாததால் வெள்ளம் வடியவில்லை: வல்லுனர் விளக்கம்
UPDATED : டிச 08, 2023 12:00 AM
ADDED : டிச 08, 2023 11:02 AM
சென்னை:
வங்கக்கடலில், மிக்ஜாம் புயலின் தாக்கம் ஓயாததால், முகத்துவார பகுதிகளில் வெள்ள நீர் வெளியேறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக, காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை வல்லுனர்கள் கூறினர்.சென்னை அண்ணா பல்கலையின் காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை பேராசிரியர் ஏ.ராமச்சந்திரன் கூறியதாவது:
பொதுவாக வங்கக்கடலில் உருவாகும் புயல், குறிப்பிட்ட திசையில் பயணித்து, எங்கு கரையை நெருங்குகிறதோ, அங்கேயே கரையை கடக்கும். இந்த வழக்கத்துக்கு மாறாக, &'மிக்ஜாம்&' புயல், அந்தமான் அருகே உருவானாலும், சென்னையை நெருங்கி வந்து, இங்கு கரையை கடக்காமல், வடக்கில் திரும்பி ஆந்திராவில் கரையை கடந்தது.பூமத்திய ரேகை அருகில் உருவாகும் புயல்களின் வெளிச்சுற்று பகுதி, எப்போதும் கடிகார சுற்றுக்கு எதிர் திசையில் அதிவேகத்தில் சுற்றும். இது, புயலின் மையப் பகுதியில் இருந்து, 300 கி.மீ., சுற்றளவுக்கு சூறாவளியாக வீசி கடுமையான தாக்கத்தை, கடலிலும், நிலத்திலும் ஏற்படுத்தும்.இதனால், மிக்ஜாம் புயல் கரையை கடந்தாலும், கடலில் அதன் தாக்கம் இன்னும் ஓயவில்லை; கடல் தொடர்ந்து கொந்தளிப்பாக காணப்படுகிறது; 13 அடி உயரம் வரை ராட்சத அலைகள் எழுகின்றன. அதிக அலைகள் எழும் நேரத்தில், நிலத்தில் இருந்து வரும் வெள்ள நீரை, கடல் உள்வாங்குவதில் தாமதம் ஏற்படும்.புயல் தாக்கம் காரணமாக, கடலில் ராட்சத அலைகள் ஏற்படுவது, ஒரு வாரம் வரை நீடிக்கும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், வெள்ள நீர் வடிகால் பணிகள், &'கட் அண்ட் கவர்&' முறையில், மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இதில், பெரும்பாலான கால்வாய்கள், 15 செ.மீ., வரையிலான மழையால் ஏற்படும் வெள்ள நீரை வெளியேற்றும் அளவுக்கே உள்ளன; அபரிமிதமான மழையை எதிர்கொள்ள போதுமானதாக இல்லை.புதிய கட்டடங்களுக்கு அனுமதி வழங்கும் போது, அது அமையும் இடத்தின் வெள்ள நீர் மட்டம், வடிகால் வழி போன்ற விஷயங்களில், சம்பந்தப்பட்ட துறைகளின் ஒப்புதல் பெறுவதை கட்டாயமாக்க வேண்டும். அப்போது தான் இதுபோன்ற பிரச்னைகளை தவிர்க்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.மண் திட்டுகளை அகற்றினாலும் தாமதமாக வெளியேறும் நீர்சென்னையில் பல்வேறு இடங்களில் தேங்கும் வெள்ள நீர், பகிங்ஹாம் கால்வாயில் தான் வெளியேற்றப்படுகிறது. குறிப்பாக, தென்சென்னையில் வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் இருந்து வரும் வெள்ள நீர், முதலில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் இறங்கும். இங்கிருந்து, ஒக்கியம் மடு வழியாக, பகிங்ஹாம் கால்வாய்க்கு செல்லும். இந்த நீர், முட்டுக்காடு பகுதியில் உள்ள முகத்துவாரம் வாயிலாக, கடலில் சேர்க்கப்படும்.சில ஆண்டுகளுக்கு முன் இதேபோன்ற வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது, பொதுப்பணித் துறை அதிகாரிகள், முட்டுக்காடு முகத்துவாரத்தில், 13 பொக்லைன் இயந்திரங்களை பயன்படுத்தி, மணல் திட்டுகளை அகற்றி, இரவு பகலாக வெள்ள நீர் வெளியேற வழி ஏற்படுத்தினர். அதேபோல தற்போதும், பொதுப்பணித் துறை அதிகாரிகள், இதற்கான பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். ஆனால், 2 மணி நேரத்துக்கு ஒரு முறை, கடலில் உயர் அலைகள் ஓயும் சமயத்தில் மட்டும் வெள்ள நீர் வெளியேற வாய்ப்பு கிடைப்பதால், அதில் சிரமம் ஏற்படுகிறது. குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ள நீர் வெளியேறுவதில் தாமதம் ஏற்பட, இது ஒரு முக்கிய காரணம் என்கின்றனர், பேரிடர் மேலாண்மை வல்லுனர்கள்.
