அறுவை சிகிச்சை கருவி தயாரித்த 10ம் வகுப்பு படித்தவர்
அறுவை சிகிச்சை கருவி தயாரித்த 10ம் வகுப்பு படித்தவர்
UPDATED : டிச 10, 2023 12:00 AM
ADDED : டிச 11, 2023 09:11 AM
பாலக்காடு:
கேரள மாநிலத்தில், பத்தாம் வகுப்பு மட்டுமே படித்தவர், மருத்துவ அறுவை சிகிச்சை கருவிகளை தயாரித்து சாதனை படைத்துள்ளார். இத்துறை குறித்து, புதிதாக பாடப்பிரிவு துவங்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், ஒற்றப்பாலம் கோதகுறுச்சியை சேர்ந்தவர் சஜீஷ், 34; பத்தாம் வகுப்பு கூட நிறைவு செய்யாத இவர், குடும்ப பொருளாதார பிரச்னை காரணமாக, வேலை தேடி பெங்களூரு சென்றார்.அங்கு, மருத்துவ அறுவை சிகிச்சை கருவிகள் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். சுத்தம் செய்தல் மற்றும் பார்சல் பிரிவில் பணியாற்றிய சஜீஷ், வேலை நேரம் போக மீதி நேரத்தில், தயாரிப்பு பிரிவு, அதன்பின் உற்பத்தி பிரிவில் பணிபுரிந்தார்.இந்நிறுவனத்தில் இருந்து, இந்தியாவில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் ஜெர்மன் மருத்துவமனைகளுக்கு தேவையான மாதிரி அறுவை சிகிச்சை கருவிகள் தயாரித்து வழங்கும் பொறுப்பை சஜீஷ் மேற்கொண்டார்.இந்நிலையில், விபத்தில் கை எலும்பு முறிவு ஏற்பட்ட பின், அந்த நிறுவனத்தில் பணியாற்ற முடியாமல் சொந்த ஊர் திரும்பினார். ஏற்கனவே அறிமுகமான மருத்துவர் ஆலோசனைப்படி, சொந்த ஊரில் தன் வாடகை வீட்டின் ஒரு பகுதியில், கே.வி.சர்ஜிக்கல் அண்ட் ரிசர்ச் சென்டர் துவங்கினார்.சஜீஷ் கூறியதாவது:
என் நிறுவனத்தில் பெரும்பாலான அறுவை சிகிச்சை கருவிகள் தயாரிக்கப்படுகின்றன. புதிய வடிவமைப்பு கருவிகள் தயாரிக்கும் ஆய்வில் தற்போது உள்ளேன். உலக தரம் வாய்ந்த கருவிகள்தயாரிப்பது என் நோக்கம்.எட்டு ஆண்டுகளாக, கருவிகளை தயாரித்து மலிவு விலைக்கு வெளிநாடுகள் உட்பட பலவேறு பகுதிகளுக்கு வழங்கி வருகிறேன். இதனால், ஏழை, எளிய மக்களுக்கு மருத்துவ அறுவை சிகிச்சை செலவு குறைகிறது.இதே பகுதியில், ஒரு ஏக்கரில் நிறுவனத்தை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளேன். இத்துறையில், 300 மாணவர்களுக்கு ஓராண்டுக்கு பயிற்சி அளிக்கும் வகையில், பாடப்பிரிவு துவங்கவும் திட்டமிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
