நுாலகங்கள் அமுதசுரபி போல் அள்ளி கொடுக்கும் மாணவர்களுக்கு கலெக்டர் அறிவுரை
நுாலகங்கள் அமுதசுரபி போல் அள்ளி கொடுக்கும் மாணவர்களுக்கு கலெக்டர் அறிவுரை
UPDATED : டிச 11, 2023 12:00 AM
ADDED : டிச 11, 2023 10:25 AM
ஊட்டி:
நுாலகங்கள் அமுதசுரபி போல் அள்ளி கொடுக்கும் மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கலெக்டர் அறிவுரை வழங்கினார்.ஊட்டியில் அரசு பொது நுாலகத்துறை, மாவட்ட நுாலக ஆணை குழு மற்றும் மாவட்ட மைய நுாலகம் சார்பில், 56-வது தேசிய நுாலக வார நிறைவு விழா நடந்தது. கலெக்டர் அருணா தலைமை வகித்து நுாலக வார விழாவை முன்னிட்டு நடந்த பேச்சுப்போட்டி, வினாடி வினா, மாறுவேடம், ஓவியப்போட்டி உட்பட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.பின், கலெக்டர் அருணா பேசியதாவது:
மக்களுக்கு குறைந்த செலவில் நிறைந்த படிப்பு என்பதை நோக்கமாகக் கொண்டு பொது நுாலகத்துறை செயல்பட்டு வருகிறது. வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் அமுதசுரபி போல் அள்ளிக் கொடுப்பவை நுாலகங்கள். நல்ல புத்தகங்கள் நல்ல கனவுகளை வளர்க்கும். நல்ல கனவுகள், நல்ல எண்ணங்களை உண்டாக்கும். நல்ல எண்ணங்கள் நல்ல செயல்களை உருவாக்கும். மாணவர்கள் புத்தக வாசிப்பில் ஈடுபாடு காட்ட வேண்டும். பள்ளி படிப்போடு, அறிவூட்டக்கூடிய புத்தகங்களை தினமும், ஒருமணி நேரம் ஒதுக்கி, வாசிப்பை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். இவ்வாறு, கலெக்டர் பேசினார்.தொடர்ந்து, ஆர்த்தி என்பவருக்கு, 2023ம் ஆண்டின் நல் நூலகர் விருது, அசோக்குமார் மற்றும் சித்ரா ஆகியோருக்கு நல்வாசகர் விருது வழங்கியதுடன், புனித ஜோசப் கல்லூரி மாணவர்கள் நுாலகத்தில் உறுப்பினர்களாக சேர்ந்தமைக்கு பாராட்டு தெரிவித்தார்.
