பள்ளிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கருவி அமைங்க! பெற்றோர் அரசுக்கு வலியுறுத்தல்
பள்ளிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கருவி அமைங்க! பெற்றோர் அரசுக்கு வலியுறுத்தல்
UPDATED : டிச 11, 2023 12:00 AM
ADDED : டிச 11, 2023 10:46 AM
உடுமலை:
அரசுப்பள்ளிகளில், மாணவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்கு கருவிகள் அமைக்க வேண்டுமென, பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.அரசுப்பள்ளிகளில், குடிநீர், கழிப்பறை மற்றும் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த வேண்டுமென பெற்றோர் பெரிதும் எதிர்பார்க்கின்றனர். கல்வித்துறையின் சார்பிலும், இதுகுறித்து அடிக்கடி ஆய்வுகள் நடத்தப்படுகிறது.குழந்தைகளுக்கு சுத்தமான குடிநீர் கட்டாயம் வழங்கப்பட வேண்டுமென அரசு அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில், உள்ளாட்சி பிரதிநிதிகள், எம்.எல்.ஏ., மற்றும் எம்.பி., பொது நிதிகளில், அரசு பள்ளிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுவதற்கான கருவி பொருத்தப்பட்டது.ஆனால், உடுமலை சுற்றுப்பகுதியில், 80 சதவீத பள்ளிகளில், இந்த கருவி பயன்பாட்டில் இல்லை. கருவி பொருத்தப்பட்ட சில மாதங்களில், பழுதடைந்துவிடுகிறது. பழுதடைந்த கருவியை சரிபார்க்க, பள்ளி நிர்வாகத்தினர் பலமுறை விண்ணப்பித்தாலும் யாரும் வருவதில்லை. இதனால், பல பள்ளிகளில் இக்கருவி காட்சிப்பொருளாக மட்டுமே உள்ளது.இக்கருவிகள் தரமில்லாமல் வழங்கப்படுவதால், விரைவில் பழுதடைந்துவிடுகிறது. மழை காலங்களில், குழந்தைகளுக்கு துாய்மையான குடிநீர் வழங்குவதற்கு இக்கருவி பெரிதும் பயனளித்தது.குழந்தைகளுக்கு குடிநீர் வாயிலாகவே பெரும்பான்மையான தொற்றுநோய்கள் பரவுகின்றன. பள்ளிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தேவை அடிப்படையாக உள்ளது. ஆனால் பெயரளவில் மட்டுமே இந்த அறிவிப்பு உள்ளது.வீடுகளிலிருந்து குழந்தைகள் குடிநீர் எடுத்துவந்தாலும், பல நேரங்களில் அவை பற்றாக்குறையாக உள்ளது. பள்ளிகளில் நேரடியான குழாய் நீர் வருவதால், பல மாணவர்கள் தாகம் எடுத்தாலும் மீண்டும் மாலை வீட்டுக்கு செல்லும் வரை குடிநீர் அருந்துவதை கட்டுப்படுத்திக்கொள்கின்றனர்.குழந்தைகள் தேவையான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பதாலும், உடல் உஷ்ணம் தொடர்பான பல நோய்கள் ஏற்படுவதாகவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அனைத்து பள்ளிகளிலும், குடிநீர் சுத்திகரிப்பு கருவி பொருத்துவதற்கும், பழுதடைந்த கருவிகளை மாற்றி வழங்குவதற்கும் கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர் வலியுறுத்துகின்றனர்.
