அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மூன்றுமாத தற்காப்பு கலை பயிற்சி
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மூன்றுமாத தற்காப்பு கலை பயிற்சி
UPDATED : டிச 12, 2023 12:00 AM
ADDED : டிச 12, 2023 10:11 AM
கோவை:
அரசுப்பள்ளிகளில் படிக்கும் ஆறு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, மூன்று மாத காலம் இலவச தற்காப்பு கலை பயிற்சி, விரைவில் அளிக்கப்பட உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.ஒருங்கிணைந்த கல்வி சார்பில், அரசுப்பள்ளிகளில் படிக்கும் ஆறு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு ஆண்டுதோறும் தற்காப்பு கலை பயிற்சி வழங்கப்படுகிறது. கராத்தே, ஜூடோ, டேக்வாண்டோ, சிலம்பம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு தற்காப்பு கலை பயிற்சியை வாரத்தில் இரு நாட்கள் பயிற்சி அளிக்க வேண்டும்.மூன்று மாதங்கள், 24 பாடவேளைகளுக்கு, பயிற்றுவிக்க வேண்டியவை குறித்த, சிலபஸ் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, வகுப்புகள் கையாள வேண்டும். பயிற்சி குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.கோவை மாவட்டத்தில், 233 நடுநிலைப்பள்ளிகள் மற்றும் 196 உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, தற்காப்பு கலை பயிற்சிக்கு, 64 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் பயிற்சியாளருக்கான ஊதியம் மற்றும் சிற்றுண்டிக்கு செலவிட உத்தரவிடப்பட்டுள்ளது.கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், பள்ளி வாரியாக, மூன்று மாதங்களுக்கு, 15 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதைக் கொண்டு, தகுதியான பயிற்சியாளர்களை நியமித்து, வகுப்பு துவக்க தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.மாணவிகளுக்கான பயிற்சியின் போது, கட்டாயம் பெண் ஆசிரியர்கள் கண்காணிப்பில் இருக்க வேண்டும். பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பயிற்சி வகுப்பு குறித்து ஆய்வு செய்வர் என்றனர்.
