UPDATED : டிச 12, 2023 12:00 AM
ADDED : டிச 12, 2023 06:04 PM
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, மூன்று சத்துணவு மையங்களுக்கு, ஐ.எஸ்.ஓ., தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில், முதல்கட்டமாக, 100 பள்ளிகளின் சத்துணவு கூடங்களுக்கு தரச்சான்றிதழ் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக, ஐ.எஸ்.ஓ., தரச்சான்று முதன்மை தணிக்கை குழு, தொடர் ஆய்வு நடத்தி வருகிறது.வெந்நீர் வசதி, வெப்பமானி பூச்சிகள் வராமல் தடுக்கும் வசதி, உணவு பாதுகாப்பு அங்கீகாரம், தொற்று இல்லாத சான்றிதழ் உள்ளிட்ட தரங்களை பின்பற்றும் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன; மாவட்டத்தில், மூன்று சத்துணவு மையங்கள் தேர்வாகியுள்ளன.திருப்பூர் மாநகராட்சியில், ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளி; உடுமலை நகராட்சியில், பழனியாண்டவர் நகர் நடுநிலைப்பள்ளி; பல்லடம், காளிவேலம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி ஆகிய பள்ளிகளின், சத்துணவு மையங்களுக்கு, ஐ.எஸ்.ஓ., தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது.கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், கலெக்டர் கிறிஸ்துராஜ், மூன்று பள்ளிகளுக்கான தரச்சான்றுகளை வழங்கி பாராட்டினார். கல்வித்துறை, சத்துணவு அலுவலர்கள் மற்றும் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் உடனிருந்தனர்.
