குரூப் 4 பணி நியமன பட்டியல் ஜன.8 க்குள் வெளியிடப்படும் உயர்நீதிமன்றத்தில் தகவல்
குரூப் 4 பணி நியமன பட்டியல் ஜன.8 க்குள் வெளியிடப்படும் உயர்நீதிமன்றத்தில் தகவல்
UPDATED : டிச 12, 2023 12:00 AM
ADDED : டிச 12, 2023 06:06 PM
மதுரை:
குரூப் 4 தேர்வு தரவரிசை அடிப்படையில் பணி நியமனத்திற்கு தேர்வானோரின் இறுதி பட்டியல் ஜன.,8 க்குள் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி.,தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவிக்கப்பட்டது. மதுரை ஸ்ரீகண்மணி, கீதா, திண்டுக்கல்
மேட்டுப்பட்டி முத்துலட்சுமி தாக்கல் செய்த மனு:
குரூப் 4 தேர்வு அறிவிப்பு 2022 மார்ச் 30 ல் வெளியானது. 10 ஆயிரத்து 117 காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு 2022 ஜுலை 24 ல் நடந்தது. 18 லட்சம் பேர் பங்கேற்றனர். நாங்கள் நன்றாக எழுதினோம். தேர்வு முடிவு 2023 மார்ச் 24 ல் வெளியானது. எங்களுக்கு குறைந்த மதிப்பெண் வழங்கப்பட்டிருந்தது.எங்களுக்கு விடைத்தாள் நகல் (ஓ.எம்.ஆர்.,) வழங்க டி.என்.பி.எஸ்.சி.,க்கு ஏற்கனவே உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை சரிபார்த்ததில் பணிக்குரிய போதிய மதிப்பெண்களை பெற்றுள்ளோம். தரவரிசை அடிப்படையில் பணி நியமனத்திற்கு தேர்வானோரின் இறுதி பட்டியல், அதில் பின்பற்றிய இட ஒதுக்கீடு விபரங்களை வெளியிட உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டனர். நீதிபதி ஆர்.விஜயகுமார் விசாரித்தார்.டி.என்.பி.எஸ்.சி.,தரப்பு:
மனுதாரர்களுக்கு விடைத்தாள் நகல்கள் வழங்கப்பட்டுள்ளது. தரவரிசை அடிப்படையில் பணி நியமனத்திற்கு தேர்வானோரின் இறுதி பட்டியல் ஜன.,8 க்குள் வெளியிடப்படும். இவ்வாறு தெரிவித்தது. இதை பதிவு செய்த நீதிபதி பட்டியலை ஜன.,8 க்குள் வெளியிட வேண்டும், என உத்தரவிட்டார்.
