பாரதியார் பல்கலையில் செல்லம்மாள் பாரதி பெயரில் கலையரங்கம்!
பாரதியார் பல்கலையில் செல்லம்மாள் பாரதி பெயரில் கலையரங்கம்!
UPDATED : டிச 12, 2023 12:00 AM
ADDED : டிச 12, 2023 06:08 PM
கோவை:
பாரதியார் பிறந்தநாள் விழா மற்றும் இளம்பாரதி விருது வழங்கும் விழா, கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்தது.விழாவில், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், பாரதியார் பல்கலையின் முன்னாள் துணை வேந்தருமான சுப்பிரமணியம் பேசியதாவது:
பாரதியின் தந்தை பெயர் சின்னச்சாமி; அவரின் இயற்பெயர் சுப்பிரமணியம், அவருடைய மனைவியின் பெயர் செல்லம்மாள். என்னுடைய தந்தையின் பெயர் சின்னச்சாமி. எனது பெயர் சுப்பிரமணியம்; என் மனைவியின் பெயர் செல்லம்மாள். இந்த ஒற்றுமையே என்னை இங்கு, பாரதி பற்றி உரையாற்ற வைத்துள்ளது.காசிக்குச் சென்று பல்வேறு மொழிகளையும் கற்ற பின்பே, &'யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்&' என்பதைத் தெளிவுபடக் கூறினார். அது போல, மாணவர்கள் கல்வியில் எல்லாவற்றையும் கற்றுச் சிறந்ததைத் தேர்வு செய்ய வேண்டும்.இளம்பாரதி விருது வழங்கப்படுவதற்குக் காரணம், பாரதியின் சிந்தனைகளைக் கற்கின்ற மாணவர்கள், பாரதியாகவே வலம் வர வேண்டும். அவரைப் போன்று தமிழ் மொழிக்கும், தாய்நாட்டிற்கும் கடமையாற்ற உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த உணர்வு, மாணவர்கள் மனதில் ஊன்றப்படும்போது, இன்னும் நிறைய பாரதிகள் பிறப்பார்கள்.வாழும் காலத்தில் புறந்தள்ளப்பட்ட பாரதி, நுாற்றாண்டு கடந்த பின்னரும் இன்று போற்றப்படுவதைக் காணும்போது, மண்ணுள்ள வரை, விண்ணுள்ள வரை, தமிழ்மொழி நிலை பெற்றிருக்கும் வரை, பாரதியின் புகழ் போற்றப்படும் என்பதை உணர முடிகிறது.பாரதியார் பல்கலைக்கழகத்தில், காணி நிலத்திட்டத்திற்கு 2 லட்சத்து 73 ஆயிரம் சதுர அடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாரதிக்கு எல்லா நிலையிலும் துணை நின்றவர் செல்லம்மாள். இந்த வளாகத்திலுள்ள மகாகவி பாரதியார் உயராய்வு மையத்தின் அருகில், செல்லம்மாள் பாரதி பெயரில் கலையரங்கம் ஒன்றைக் கட்டுவதற்கான அனுமதியை, துணை வேந்தர் பொறுப்புக்குழு உறுப்பினர்கள் வழங்க வேண்டும். இந்த கலையரங்கம் கட்டுவதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளுக்கு, நான் பொறுப்பேற்கிறேன்.இவ்வாறு, சுப்பிரமணியம் பேசினார்.விழாவுக்கு, துணை வேந்தர் பொறுப்புக்குழு உறுப்பினர் லவ்லினா லிட்டில் பிளவர் தலைமை வகித்தார். துணைவேந்தர் பொறுப்புக்குழு உறுப்பினர் அஜித்குமார் லால் மோகன் வாழ்த்திப் பேசினார்.விழாவை முன்னிட்டு, இளம் பாரதி விருதுகளுக்கு, கல்லுாரி, பல்கலைக்கழகத் துறைகளுக்கு நடத்தப்பட்ட பேச்சு, கவிதை மற்றும் கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற 18 பேருக்கு, இளம்பாரதி-2023 விருது கேடயம், பதக்கம், பரிசுகள், சான்றிதழ், பாரதி தலைப்பாகை ஆகியவை வழங்கப்பட்டன.விழாவில், பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர்கள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள்மற்றும் மாணவர்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.பல்கலை பதிவாளர் (பொறுப்பு) ஜெயக்குமார் வரவேற்றார். தமிழ்த்துறைத் தலைவரும், பாரதியார் உயராய்வு மைய இயக்குனருமான சித்ரா நன்றி கூறினார்.
