என்.ஐ.டி., துாதுவர்களாக முன்னாள் மாணவர்கள்: இயக்குனர் பெருமிதம்
என்.ஐ.டி., துாதுவர்களாக முன்னாள் மாணவர்கள்: இயக்குனர் பெருமிதம்
UPDATED : டிச 14, 2023 12:00 AM
ADDED : டிச 14, 2023 09:45 AM
திருச்சி:
திருச்சி என்.ஐ.டி.,யில் நடந்த நிகழ்ச்சியில் சிறந்த முன்னாள் மாணவர்கள் மற்றும் இளம் சாதனையாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது.திருச்சி என்.ஐ.டி.,யில் படித்து, உலகெங்கும் கல்வி, தொழிற்சாலை, ஆராய்ச்சி மையம், போலீஸ் உட்பட பல துறைகளில் சிறந்து விளங்குபவர்கள் மற்றும் இளம் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி என்.ஐ.டி., இயக்குனர் அகிலா தலைமையில் நடந்தது.டாடா சன்ஸ் நிறுவன இயக்குனர் பாஸ்கர்பட் பல்வேறு துறையில் சிறந்து விளங்கும் என்.ஐ.டி., முன்னாள் மாணவர்கள் மற்றும் இளம் சாதனையாளர்களுக்கு விருது வழங்கி பேசியதாவது:
இந்தியாவில் உள்ள என்.ஐ.டி.,களில் முதலிடத்தில் இருக்கும் திருச்சி என்.ஐ.டி.,யில் படித்த பலர் உலகெங்கும் பெரிய நிறுவனங்களில் உயர் பதவிகளில் உள்ளனர். இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் கல்வி, விளையாட்டு, கலை உட்பட பல துறைகளிலும் என்.ஐ.டி., சிறந்து விளங்குகிறது. ஆசிரியர்கள், மாணவர்கள், பணியாளர்களின் கூட்டு முயற்சி தான் இந்த சிறப்புக்கு காரணம்.என்.ஐ.டி.,யில் உள் கட்டமைப்பை வலுப்படுத்த மத்திய அரசு மற்றும் முன்னாள் மாணவர்கள் சங்கம் நிதி உதவி செய்து வருகிறது. முன்னாள் மாணவர்கள் தங்கள் திறமை மற்றும் அனுபவங்களை இளம் மாணவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.என்.ஐ.டி., இயக்குனர் அகிலா பேசுகையில், முன்னாள் மாணவர்கள் என்.ஐ.டி.,யில் துாதுவர்களாக விளங்குகின்றனர். நிதி உதவி, சர்வதேச கருத்தரங்கு, உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றில் முன்னாள் மாணவர் சங்கத்தின் பங்கு மகத்தானது.பல சர்வதேச நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டு மாணவர், ஆசிரியர் பரிமாற்றம், பயிலரங்கம், கருத்தரங்கம் ஆகியவை மேற்கொள்ளப்படுகின்றன. மாணவர், ஆசிரியர்கள் புரிந்துணர்வுடன் செயல்படுவதால் திருச்சி என்.ஐ.டி., சிறந்து விளங்குகிறது, என்றார்.நிகழ்ச்சியில் என்.ஐ.டி., முன்னாள் மாணவர் சங்க தலைவர் மகாலிங்கம் உட்பட பலர் பங்கேற்றனர். முன்னதாக டீன் சுப்பையன் வரவேற்றார்.
