UPDATED : டிச 16, 2023 12:00 AM
ADDED : டிச 16, 2023 06:10 PM
புதுச்சேரி:
புதுச்சேரி அரசின் பல்வேறு துறைகளில் 10 ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளன. என்.ஆர்.காங்., பா.ஜ., ஆட்சி பொறுப்பேற்றதும் இந்த காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். அதையடுத்து தொடர்ச்சியாக அரசு பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. இதுவரை 1,200 அரசு பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டு, 1,000 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. மீதமுள்ள 8,800 காலி பணியிடங்கள் நிரப்ப வேண்டியுள்ளன. ஆனால், நிர்வாக சீர்த்திருத்த துறையில் குறைவான பணியாளர்கள் உள்ள சூழ்நிலையில் எஞ்சியுள்ள பணியிடங்களை விரைவாக நிரப்ப முடியுமா என்பது சந்தேகமே என, இளைஞர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.ஏனெனில், நிர்வாக சீர்த்திருத் துறையின் தேர்வு பிரிவில் மொத்தமே 5 நிரந்தர பிரிவு ஊழியர்கள் உள்ளனர். இவர்கள் தான் அனைத்து அரசு பணியிடங்களுக்கான போட்டி தேர்வுகளை ஒருங்கிணைத்து நடத்தி வருகின்றனர்.குறைவான பணியாளர்களை வைத்துக்கொண்டு இதுவரை அரசு போட்டி தேர்வுகளை நடத்தியதே பெரிய சவால் தான். இருக்கின்றவர்களை வைத்துக்கொண்டு, எஞ்சியுள்ள இரண்டரை ஆண்டு ஆட்சிக்காலத்தில் 8,800 அரசு பணியிடங்களை நிரப்புவது சாத்தியமில்லை. ஏற்கனவே மாநிலத்திற்கு தனியாக தேர்வாணையம் இல்லாத சூழ்நிலையில், இது மேலும் சிக்கலை ஏற்படுத்தும்.கிட்டதட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு தான் அனைத்து பணியிடங்களையும் நிரப்ப அரசு முயற்சி எடுத்துள்ளது. இப்போது தள்ளி போடப்படும் ஒவ்வொரு வேலைவாய்ப்பு அறிவிப்பும் வயது முதிர்ந்த பட்டதாரிகளுக்கு வாய்ப்பினை தட்டி பறித்து விடும் என, இளைஞர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.என்ன செய்யலாம்
மாநில தேர்வாணையம் அமைக்க வாய்ப்பில்லாத சூழ்நிலையில், புதுச்சேரிக்கு என்று தனியாக துணை பணியாளர் தேர்வு வாரியம் அமைக்க புதுச்சேரி அரசு முடிவு செய்து, இதற்கான பூர்வாங்க பணிகளையும் முடுக்கிவிட்டது.இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு புதுச்சேரி அரசு கோப்பு அனுப்பியுள்ளது. மத்திய அரசும், துணை பணியாளர் தேர்வு வாரியம் தொடர்பாகவும், காலிபணியிடங்கள் சம்பந்தமாகவும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி விளக்கம் கேட்டது. இதற்கும் புதுச்சேரி அரசு விளக்கம் அளித்துள்ளது. ஆனாலும் துணை பணியாளர் தேர்வு வாரியம் சம்பந்தமான கோப்பு மீது இறுதி முடிவு எடுக்கப்படாமல் உள்ளது.டில்லி யூனியன் பிரதேசத்தில் துணை பணியாளர் தேர்வு வாரியம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சேர்மன், ஒரு தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, ஒரு உறுப்பினர், 5 துணை செயலர்களை கொண்டு நிர்வகிக்கப்படுகிறது. அனைத்து அரசு பணியிடங்களும் வெளிப்படையாக தேர்வு செய்யப்படுகின்றன. அரசு துறைகளில் காலி பணியிடங்கள் விரைவாக நிரப்பப்படுகின்றன.தமிழகம் உள்பட பிற மாநிலங்களில் லட்சக்கணக்கான அரசு பணியிடங்கள் உடனடியாக அறிவிப்பு வெளியிட்டு போட்டி தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன. ஆனால் புதுச்சேரியில் 10 ஆயிரம் பணியிடங்களை நிரப்பவே திணற வேண்டியுள்ளது. அப்படியே வேலைக்கான அறிவிப்பு வெளியிட்டாலும் பல மாதம், ஓராண்டு கழித்து போட்டி தேர்வு நடத்தப்படுவது இளைஞர்கள் மத்தியில் விரக்தியை ஏற்படுத்துகிறது. எனவே, முதலில் புதுச்சேரி அரசு, மத்திய அரசினை அணுகி, மாநில துணை பணியாளர் தேர்வு வாரியம் அமைக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். அதற்கான கட்டமைப்பினை ஏற்படுத்த வேண்டும்.இதன் மூலம் புதுச்சேரி அரசு துறைகளில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் விரைவாக நிரப்பி, இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி தர முடியும்.எந்தெந்த பதவிகள்
புதுச்சேரி மாநிலத்தினை பொறுத்தவரை குரூப்-ஏ பணியிடங்களை புதிதாக ஏற்படுத்தப்பட உள்ள துணை பணியாளர் தேர்வு வாரியம் நிரப்ப முடியாது. இருப்பினும் இனம் குரூப்-ஏ பணியிடங்கள் வழக்கம்போல் மத்திய தேர்வாணையம் நிரப்பும். குரூப் பி பணியிடத்தில் அரசு பதிவு பெறாத அரசு ஊழியர் பணியிடங்கள், சி பிரிவு பணியிடங்களை மட்டும் துணை பணியாளர் தேர்வு வாரியம் நிரப்பும்.
