UPDATED : டிச 17, 2023 12:00 AM
ADDED : டிச 17, 2023 05:30 PM
திருப்பூர்:
கல்லுாரி படிப்பு முடிக்கும் பெண்கள், தொழிலதிபர்களாக வேண்டும் என, கோவை வேளாண் பல்கலை., துணை வேந்தர் கீதாலட்சுமி பேசினார்.திருப்பூர், பல்லடம் ரோடு, எல்.ஆர்.ஜி., அரசு மகளிர் கல்லுாரியில், 34வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. 2019 முதல், 2022 வரை படித்து முடித்த, 957 இளங்கலை, 150 முதுகலை முடித்த, 1,107 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது. கல்லுாரி முதல்வர் எழிலி வரவேற்றார்.மாணவியருக்கு பட்டங்களை வழங்கி, கோவை வேளாண் பல்கலை துணை வேந்தர் கீதாலட்சுமி பேசியதாவது:
அரசியல், கலை, சேவை, விண்வெளி ஆராய்ச்சி, அறிவியல் என, அனைத்து துறைகளிலும் பெண்கள் சாதிக்கின்றனர். பெண்களுக்கு சொத்துரிமை, பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களுக்கு &'போக்சோ&' சட்டத்தில் கடும் தண்டனை என, பெண்களை பாதுகாக்க பல சட்டங்களை அரசு வகுத்துள்ளது.பெண்கள் நல்ல முறையில் கல்வி கற்க வேண்டும்; அரசு வேலைக்காக மட்டும் காத்திராமல், முயற்சிக்காமல், சுய தொழில் புரிவதற்கான வாய்ப்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.அதற்கு அரசின் சார்பில் பல்வேறு மானிய உதவி, கடன் வழங்கப்படுகிறது. வேளாண் துறையில், வணிகம் சார்ந்த பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு உதவி செய்து வருகிறோம்; இத்துறை சார்ந்த யோசனைக்கு வடிவம் கொடுக்கும் பணியை செய்கிறோம். இந்த வாய்ப்பை பலரும் பயன்படுத்தி, தொழில் முனைவோராக உருவாகி வருகின்றனர். சிறுதானிய பயன்பாடு ஊக்குவிக்கப்பட்ட இந்த ஆண்டில், சிறுதானியம் சார்ந்த உணவுப் பொருள் உற்பத்தியில் பலரும் ஈடுபட துவங்கி யிருக்கின்றனர். இவ்வாறு, அவர் பேசினார்.கடந்த, 2019 - 2022ம் கல்வியாண்டில், 20 இளநிலை, 6 முதுகலை மாணவியர், பாரதியார் பல்கலை தர வரிசைப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இவர்களில், இளநிலை பிரிவில் திவ்யா (தாவரவியல்), ஆதித்யா (மின்னணுவியல்), ஜெய்ஸ்ரீ (இயற்பியல் மற்றும் கணிணி பயன்பாடு) பல்கலை தர வரிசையில், முதலிடம் பிடித்தனர்.
