UPDATED : டிச 18, 2023 12:00 AM
ADDED : டிச 18, 2023 09:55 AM
சிவகங்கை:
சிவகங்கையில் கலை பண்பாட்டு துறை சார்பில் ஜன., 7 அன்று மாவட்ட அளவிலான குரலிசை, பரதம், கிராமிய நடனம், கருவி இசை மற்றும் ஓவிய போட்டிகள் நடைபெறும் என மதுரை மண்டல உதவி இயக்குனர் கோபால கிருஷ்ணன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது, தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறை சார்பில் வயது 17 முதல் 35 க்கு உட்பட்டோருக்கு மாநில, மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள் சிவகங்கை, கேந்திரிய வித்யாலயா பள்ளி அருகே உள்ள அரசு இசைப்பள்ளியில் ஜன., 7 ம் தேதி நடைபெற உள்ளது. குரலிசை, பரதம், கிராமிய நடனம், கருவி இசை மற்றும் ஓவியம் ஆகிய 5 பிரிவுகளில் காலை 10:00 மணிக்கு போட்டி நடக்கும். தனி நபர் போட்டி 5 நிமிடம் மட்டுமே அனுமதி.குரலிசையில் நாதஸ்வரம், வயலின், வீணை, புல்லாங்குழல், ஜலதரங்கம், கோட்டு வாத்தியம், மாண்டலின், கிதார், சாக்ச போன், கிளாரினெட் போன்ற கருவிகள், 5 வர்ணங்கள் மற்றும் கற்பனை இசை நிகழ்த்தும் தரத்தில் போட்டி நடக்கும். தாளக்கருவிகளான தவில், மிருதங்கம், கஞ்சிரா, கடம், மோர்சிங், கொன்னக்கோல் ஆகியவற்றில் வாசிக்க தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.பரதத்தில் 3 வர்ணங்கள் மற்றும் பாடல்கள் நிகழ்த்துபவராக இருத்தல் வேண்டும். கிராமிய நடனத்தில் கரகம், கணியான் கூத்து, காவடி, மயிலாட்டம், புரவியாட்டம், காளை ஆட்டம், மரக்கால் ஆட்டம், ஒயிலாட்டம், புலியாட்டம், தப்பாட்டம் மலை மக்கள் போன்றவை அனுமதிக்கப்படும். ஓவிய போட்டியில் பங்கேற்போருக்கு தாட்கள் மட்டும் வழங்கப்படும். அக்ரிலிக், வாட்டர் கலர் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.நடுவர்கள் வழங்கும் தலைப்பில் மட்டுமே ஓவியம் வரைய வேண்டும். அதிக பட்சம் 3:00 மணி நேரம் அனுமதிக்கப்படும். மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.6,000, இரண்டாம் பரிசு ரூ.4,500, மூன்றாம் பரிசு ரூ.3,500 வழங்கப்படும். மாவட்ட அளவில் முதல் பரிசு பெறுவோர் மாநில போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவர். கூடுதல் விபரத்தை 95000 08204ல் கேட்டு அறியலாம், என்றார்.
