UPDATED : டிச 18, 2023 12:00 AM
ADDED : டிச 18, 2023 10:20 AM
கோவை:
கோவை அரசு கலை கல்லுாரி இலவச ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையத்தில், அரசு பணிக்கான தேர்வுகள், குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நேற்று நடந்தது. மண்டல பாஸ்போர்ட் அதிகாரி சதீஷ் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.அவர் பேசியதாவது:
இந்திய வனப்பணி தேர்வு மூன்று கட்டங்களாக, மத்திய பொதுப்பணி ஆணையத்தால் நடத்தப்படுகிறது. இந்திய வனப்பணிக்கும், குடிமைப் பணிக்கும் முதல் நிலை தேர்வு பொதுவானதாகும். முதன்மை தேர்வு, வனப்பணிக்கு தனியாக நடத்தப்படுகிறது. மூன்றாம் கட்டமாக நேர்காணல் நடத்தப்படும்.மத்திய பொதுப்பணி தேர்வாணையம் வாயிலாக தேர்வு செய்யப்படும் அதிகாரிகள், மாநில அரசாங்கத்தின் கீழ் பணியாற்றுவார்கள். மாநில அரசுக்கு, இப்பிரிவு அதிகாரிகளை இடமாற்றம் செய்ய இயலும். ஆனால், பணி நீக்கம் செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது. இத்தேர்வில் வெற்றி பெறுபவர்கள், பெரும்பாலும் சொந்த மாநிலத்தில் பணியாற்ற முடியாது. ஆகவே, வெளிமாநிலங்களில் பணியாற்ற, தயாராக இருக்க வேண்டியது அவசியம்.கடின உழைப்பு இருந்தால், இத்தேர்வில் வெற்றி பெற முடியும். இந்திய வனப்பணி அதிகாரிகள், குறிப்பிட்ட ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, மத்திய அரசாங்க பணிக்கு மாற்றுப் பணியில் செல்லலாம். இயற்கை, காடுகள், காட்டுயிர் மீது ஆர்வம் உள்ளவர்கள், இப்பணிக்கு முயற்சிக்கலாம்.இவ்வாறு, அவர் பேசினார்.கல்லுாரியின் அரசியல் அறிவியல் துறை தலைவர் மற்றும் ஐ.ஏ.எஸ்., இலவச பயிற்சியாளர் பேராசிரியர் கனகராஜ், அரசு தேர்வுகளில் வெற்றி பெறுவது குறித்த, வழிகாட்டுதல்களை வழங்கினார்.
