காய்கறி தோட்டம் அமைக்கும் திட்டத்திற்கு பள்ளிகளுக்கு 32 லட்சம் ஒதுக்கீடு
காய்கறி தோட்டம் அமைக்கும் திட்டத்திற்கு பள்ளிகளுக்கு 32 லட்சம் ஒதுக்கீடு
UPDATED : டிச 18, 2023 12:00 AM
ADDED : டிச 18, 2023 05:29 PM
சேலம்:
சேலம் மாவட்டத்தில் பள்ளி காய்கறி தோட்டம் அமைக்கும் திட்டம் சில அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் செயல்படுத்தப்பட உள்ளது. அதற்கு பள்ளிகளில் நேரடி சூரிய ஒளி பெறும் இடத்தை தேர்வு செய்ய வேண்டும். நிலம் இல்லையெனில் தொட்டிகள், உபயோகித்த பிளாஸ்டிக் பொருட்கள், அரிசி பைகளை கொண்டு அமைக்கலாம். நீர் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். மாணவர்கள் கை கழுவும் நீரை பயன்படுத்தும்படி தோட்டத்தை அமைக்கலாம். இதுபோல் மதிய உணவு சமையல் அறையில் இருந்து வெளிவரும் கழிவு நீரை பயன்படுத்தும்படியும் செயல்படுத்தலாம்.கத்திரி, தக்காளி, கீரைகள், கொத்தமல்லி, அவரைக்காய், மிளகாய், வெண்டைக்காய், காராமணி, கொத்தவரங்காய், பீன்ஸ், முள்ளங்கி, பப்பாளி உள்ளிட்ட பிற காய்கறி விளைவிக்க வேண்டும். இதற்கு வேளாண், தோட்டக்கலை துறை மற்றும் உள்ளூர் நிர்வாகம், பள்ளிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு, தோட்டத்தை சிறப்பாக உருவாக்க, மாவட்ட அளவில் குழு மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.பள்ளிகளில் காய்கறி தோட்டம் அமைக்க, சுற்றுச்சூழல் மன்றம் சார்ந்த நிகழ்வுகளுக்கு செலவினம் மேற்கொள்ள ஒரு பள்ளிக்கு தலா, 5,000 ரூபாய் விடுக்கப்படுகிறது. இத்திட்டத்துக்கு சேலம் மாவட்டத்தில், 654 பள்ளிகளுக்கு, 32.70 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து விடுவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திட, கண்காணிக்க, பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
