இடத்தை தராத கல்வித்துறை: மருத்துவமனை கட்டுமான பணி கிடப்பில்
இடத்தை தராத கல்வித்துறை: மருத்துவமனை கட்டுமான பணி கிடப்பில்
UPDATED : டிச 20, 2023 12:00 AM
ADDED : டிச 20, 2023 09:56 AM
நெல்லிக்குப்பம்:
நெல்லிக்குப்பம் நகராட்சியில், ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. நகர பகுதி மக்கள் மட்டுமின்றி சுற்றுபுற கிராம மக்களும் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.தற்போது, பகல் நேரத்தில் மட்டுமே சுகாதார நிலையம் இயங்கி வரும் நிலையில், ஒரு டாக்டர் மட்டுமே பணியில் உள்ளார். இதனால், பொதுமக்கள் அவசரத்திற்கு கடலுார் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.எனவே, பொதுமக்கள் நலன் கருதி, இந்த சுகாதார நிலையத்தை, 24 மணி நேரமும் செயல்படும், மருத்துவமனையாக தரம் உயர்த்த, பல ஆண்டுகளாக பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். தொகுதி எம்.எல்.ஏ., முயற்சியால், சுகாதாரத்துறை அமைச்சர் சுப்ரமணியன் அந்த இடத்தை பார்வையிட்டு விரைவில், மருத்துவமனை தரம் உயர்த்தப்படும் என உறுதியளித்தார்.ஆனால், தற்போதுள்ள இடம் போதுமானதாக இல்லை என்பதால், அருகில் பயன்படுத்தப்படாமல் உள்ள பழைய பள்ளி கட்டடம் அமைந்துள்ள இடத்தை பெற்று, மருத்துவமனை அமைக்க முடிவு செய்யப்பட்டது.அதன்படி, கலெக்டர் மூலம் அந்த இடத்தை சுகாதாரத்துறைக்கு மாற்றி தர வேண்டுமென பள்ளிகல்வி துறை செயலாளருக்கு கடிதம் எழுதப்பட்டது. அந்த இடம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் மருத்துவமனையை விரிவாக்கம் செய்ய, நகராட்சி மூலம் 1 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டது.ஆனால் இதுவரையில், பள்ளிக்கல்வி துறை அந்த இடத்தை, சுகாதாரத்துறைக்கு வழங்காமல் அடம் பிடித்து வருகிறது. இதனால், டெண்டர் விட்டும் மருத்துவமனை கட்டுமான பணி துவக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், கைக்கு எட்டியது, வாய்க்கு எட்டவில்லை என்றநிலையில், மக்கள் புலம்பி வருகின்றனர்.எனவே, சுகாதாரத்துறை அமைச்சர் இந்த விஷயத்தில் தலையிட்டு, அந்த இடத்தை பெற்று மருத்துவமனை கட்டும் பணியை துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
