ஆயுஷ் மருத்துவத்தில் தொழில்நுட்பம்: சென்னை ஐ.ஐ.டி.,யுடன் ஆலோசனை
ஆயுஷ் மருத்துவத்தில் தொழில்நுட்பம்: சென்னை ஐ.ஐ.டி.,யுடன் ஆலோசனை
UPDATED : டிச 20, 2023 12:00 AM
ADDED : டிச 20, 2023 10:05 PM
ஆயுஷ் மற்றும் பாரம்பரிய மருத்துவ முறைகளில், வாதம், பித்தம், கபம் என்ற அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. குறிப்பாக, மனித உடலில், காற்று, வெப்பம், நீர் ஆகிய மூன்றும், தாம் இருக்க வேண்டிய அளவில் குறைவுபட்டாலும், அதிகமானாலும் நோய் தோன்றும்.நோய் பாதிப்பு
அதற்கான சிகிச்சை முறைகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில், அலோபதி மருத்துவம்போல், தொழில்நுட்பம் மற்றும் நோய் பாதிப்பு தன்மையை உறுதி செய்வதற்கான கருவிகள், ஆயுஷ் மருத்துவத்தில் இல்லை.இதனால், பெரும்பாலான நோய்களுக்கு, சித்தா, யுனானி, ஆயுர்வேதா, ஓமியோபதி, யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தில் சிகிச்சை அளித்தாலும், நோயின் பாதிப்பை, அலோபதி மருத்துவ முறைகளில் தான் உறுதி செய்ய முடிகிறது.இந்நிலையில், பாரம்பரிய மருத்துவ முறைகளிலும், நோயின் பாதிப்பை உறுதி செய்வதற்கான தொழில்நுட்பத்தை கொண்டு வர, ஆயுஷ் டாக்டர்கள் முயற்சித்து வருகின்றனர்.இதுகுறித்து, இம்ப்காப்ஸ் எனும் இந்திய மருந்துகள் கூட்டுறவு பண்டக சாலையின் இயக்குனர் டாக்டர் மீரா கூறியதாவது:
ஆயுஷ் மற்றும் பாரம்பரிய டாக்டர்கள், வாதம், பித்தம், கபம் மற்றும் நாடித் துடிப்பு போன்ற அடிப்படையில் சிகிச்சை அளிக்கின்றனர். இவ்வகை சிகிச்சைகள், மக்களுக்கு பயனுள்ளதாக அமைகின்றன.பெரும் தொகை
அதேநேரம், சிகிச்சைக்கு முன், எந்த மாதிரியான அளவு பாதிப்பு, சிகிச்சைக்கு பின் எந்த மாதிரி உள்ளது என்பதை, அவர்களுக்கு நாங்கள் தெளிவுப்படுத்தினாலும், கண்களால் பார்க்காமல், அவர்களால் ஏற்க முடியாத நிலை உள்ளது. இதற்காக, வாதம், பித்தம், கபம் ஆகியவற்றை அறிவதற்கான தொழில்நுட்பத்தை கொண்டு வர, உயர் கல்வி நிறுவனமான சென்னை ஐ.ஐ.டி.,யுடன் ஆலோசித்து வருகிறோம்.இதற்கு பெரும் தொகை செலவாகும் என்பதால், மத்திய, மாநில அரசுகள், ஆயுஷ் மருத்துவ ஆராய்ச்சிக்கு அளிக்க முன்வர வேண்டும். அதேபோல், ஆயுஷ் மருத்துவத்தை மேம்படுத்தும் வகையில், தனி ஆராய்ச்சி மையத்தையும் பல்கலை அளவில் அமைத்தால், பல்வேறு மருந்துகளின் தன்மையை உறுதி செய்ய முடியும். அப்போது தான், கொரோனா போன்ற பெரும் நோய்கள் வந்தாலும், அதற்கான தீர்வை அறிவியல்ப்பூர்வமாக கூறி, சிகிச்சை முறையை விரிவுப்படுத்த முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
