பள்ளி மேலாண்மை குழு தீர்மானங்கள் நடவடிக்கை குறித்து மீளாய்வு கூட்டம்
பள்ளி மேலாண்மை குழு தீர்மானங்கள் நடவடிக்கை குறித்து மீளாய்வு கூட்டம்
UPDATED : டிச 21, 2023 12:00 AM
ADDED : டிச 21, 2023 05:18 PM
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சியில் பள்ளி மேலாண்மை குழு தீர்மானங்கள் மீதான நடவடிக்கைகள் குறித்த மீளாய்வு கூட்டம் நடந்தது.கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் பள்ளி கல்வி துறை, ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மற்றும் பள்ளி மேலாண்மை குழு தீர்மானங்கள் மீதான நடவடிக்கைகள் மற்றும் மீளாய்வு தொடர்பான கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினார்.கூட்டத்தில் பள்ளி மேலாண்மை குழு மூலம் இயற்றப்பட்ட தீர்மானங்கள் மீது தொடர்புடைய துறை தலைவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்வி தொடர்பான தேவைகளை நிறைவேற்றுவதில் துறைத் தலைவர்கள் கவனம் செலுத்த வேண்டும். பள்ளி தலைமையாசிரியர்கள், பள்ளி அளவில் செய்து முடிக்ககூடிய பணிகளை பள்ளி மேலாண்மை குழு மற்றும் சமூக ஆர்வலர்களை கொண்டு மேற்கொள்ள வேண்டும்.பள்ளி மேலாண்மை குழு பள்ளிகளின் தேவைகளை தீர்மானமாக நிறைவேற்றி அவற்றை உரிய துறை அலுவலர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். துறை அலுவலர்கள் பள்ளிகளின் தேவைகளை உடனடியாக கண்டறிந்து விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.பள்ளிகளில் மாணவர்கள் ஒழுக்க நிலை கடைபிடிக்க தேவையான அறிவுரைகள், ஆலோசனை வழங்கிட வேண்டும். குழந்தை திருமணம் தடுத்தல், பஸ்சில் மாணவர்கள் படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்யாமல் இருப்பதற்கு போதிய பஸ் வசதி ஏற்படுத்துவது உள்ளிட்ட சேவைகளை கண்டறிந்து தீர்வு காண வேண்டும் என்று எடுத்துரைக்கப்பட்டது.இதில் கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) யோகஜோதி, சி.இ.ஓ., முருகன், டி.இ.ஓ., ஆரோக்கியசாமி, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ஜோதிமணி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா மற்றும் பள்ளி தலைமையாசிரியர்கள், வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.
