பேராசிரியர் தில்லை நாயகத்துக்கு விஜயா வாசகர் வட்டம் விருது
பேராசிரியர் தில்லை நாயகத்துக்கு விஜயா வாசகர் வட்டம் விருது
UPDATED : டிச 24, 2023 12:00 AM
ADDED : டிச 24, 2023 10:49 AM
கோவை:
விஜயா வாசகர் வட்டம் சார்பில், வழங்கப்படும் சிறந்த ஆங்கில மொழிபெயர்ப்பாளருக்கான அ.முத்துலிங்கம் விருது, இந்த ஆண்டு பேராசிரியர் தில்லைநாயகத்துக்கு வழங்கப்படுகிறது.கோவை விஜயா வாசகர் வட்டம் சார்பில், தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழியாக்கம் செய்யும் சிறந்த மொழிபெயர்ப்பாளர் ஒருவருக்கு, ஆண்டுதோறும் எழுத்தாளர் அ.முத்துலிங்கம் பெயரில் விருது வழக்கப்பட்டு வருகிறது.2024ம் ஆண்டுக்கான இந்த விருது, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை முன்னாள் ஆங்கிலத்துறை பேராசிரியர் தில்லைநாயகத்துக்கு வழங்கப்படுகிறது. இந்த விருது, ஒரு லட்சம் ரூபாய் ரொக்கமும், பரிசு கேடயமும் கொண்டது. பேராசிரியர் தில்லைநாயகம், திருக்குறளுக்கு எளிய தமிழிலும், ஆங்கிலத்திலும் உரை நுால் ஒன்றை வெளியிட்டுள்ளார். சாகித்ய அகாடமிக்காக சுந்தரராமசாமியின் தேர்ந்தெடுத்த கட்டுரைகள், ஏ.கே.செட்டியாரின் அண்ணல் அடிச்சுவட்டில், அ.முத்துலிங்கத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் உள்ளிட்ட பல நுால்களை தொகுத்துள்ளார்.இன்னும் பல தமிழ் நுால்களை, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். அதனால் இந்த ஆண்டுக்கான அ.முத்துலிங்கம் மொழிபெயர்ப்பு விருது, அவருக்கு வழங்கப்படுகிறது. ஜன., 28ம் தேதி உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தலைமையில் இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது.
