UPDATED : டிச 24, 2023 12:00 AM
ADDED : டிச 24, 2023 10:57 AM
கோவை:
கோவை மாவட்டத்தில் கல்வி கடன் கோரி, 3,634 மாணவ - மாணவியர் விண்ணப்பித்தனர். 808 மாணவர்களுக்கு கடன் வழங்கப்பட்டு, மாநில அளவில் கோவை முதலிடத்தில் இருக்கிறது.கோவை மாவட்டத்தில் உயர் கல்வி கற்கும் மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்க, வங்கிகளுக்கு ரூ.400 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்தொகை, ஏழை எளிய மாணவர்களை சென்றடைவதில்லை. பிணையம் இன்றி கடன் வழங்க வேண்டும்; உயர்கல்வி முடித்த பின், ஓராண்டுக்கு பிறகே கடன் தவணையை மாணவர்கள் திருப்பிச் செலுத்துவர் என்பதால், பெரும்பாலான வங்கிகள், கல்வி கடன் வழங்க தயக்கம் காட்டுகின்றன.இதையறிந்த கலெக்டர் கிராந்திகுமார், ஏழை எளிய மாணவ, மாணவியரும் உயர் கல்வி கற்க வேண்டுமென்கிற உயரிய நோக்கத்தில், கல்வி கடன் வழங்குவதற்கு தொடர்ச்சியாக இரு மாதங்கள் சிறப்பு முகாம்கள் நடத்தினார். விண்ணப்பங்கள் இணைக்க தேவையான, வருவாய்த்துறை சான்றிதழ்கள் ஒரே இடத்தில் கிடைக்கச் செய்தார்.இருப்பினும், பெரும்பாலானோருக்கு கடன் கிடைக்காததால், கலெக்டர் அலுவலகத்தில், வழிகாட்டி மையம் திறக்கப்பட்டது. ஸ்டேட் பாங்க், கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊழியர்கள் நியமிக்கப்பட்டு, மாணவர்களுக்கு வழிகாட்டுதல் வழங்கப்பட்டது. இதை கண்காணிக்க, முதன்மை குழுவும் ஏற்படுத்தப்பட்டது.மொத்தம், 3,634 மாணவ - மாணவியரிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, வித்யலட்சுமி என்கிற இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. முதல்கட்டமாக, 808 மாணவ, மாணவியருக்கு கல்வி கடன் வழங்கப்பட்டுள்ளது. 333 பேருக்கு கடன் வழங்குவதற்கான அப்ரூவல் நிலையில் உள்ளது. 906 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கும் நிலையில் இருக்கின்றன. 1,381 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன. 206 விண்ணப்பங்கள் மட்டும் நிராகரிக்கப்பட்டு உள்ளன.மாவட்ட நிர்வாக அதிகாரிகள் கூறுகையில், கல்வி கடன் வழங்க, வங்கி அதிகாரிகள் தயக்கம் காட்டுவது உண்மையே. சிறப்பு குழு அமைத்து, அழுத்தம் கொடுத்ததன் பலனாக, 808 மாணவர்களுக்கு வழங்கி உள்ளனர். இன்னும் தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். மாநில அளவிலும் அரசு உயரதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.கடந்த மூன்று வாரங்களில், கல்வி கடன் வழங்கியதை ஆய்வு செய்ததில், 22 சதவீதம் பெற்று, மாநில அளவில் கோவை முதலிடத்தில் இருக்கிறது. இது, பெருமை என்றாலும் கூட, நமது முயற்சிக்கேற்ற பலன் கிடைக்கவில்லை என்பதால், வங்கி நிர்வாகங்களுடன் தொடர்ந்து பேசி வருகிறோம் என்றனர்.
