UPDATED : டிச 24, 2023 12:00 AM
ADDED : டிச 24, 2023 09:52 PM
சென்னை:
சொத்து குவிப்பு வழக்கில், அமைச்சர் பொன்முடிக்கு, நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறை மற்றும் 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது. எனவே, அவர் தன் அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ., பதவியை இழந்தார்.அதைத் தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் பரிந்துரையை ஏற்று, பொன்முடி வகித்து வந்த உயர் கல்வித் துறையை, தற்போது பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சராக உள்ள ராஜகண்ணப்பனிடம், கூடுதலாக ஒப்படைக்கப்பட்டது. ராஜகண்ணப்பன் கூடுதலாக கவனித்து வந்த, காதி மற்றும் கிராம தொழில் வாரியம், கைத்தறித் துறை அமைச்சர் காந்தியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை கவர்னர் ரவி பிறப்பித்துள்ளார்.கடந்த ஆண்டு டிசம்பரில், அமைச்சராக உதயநிதி பொறுப்பேற்றபோது, 10 அமைச்சர்களின் துறைகள் மாற்றம் செய்யப்பட்டன. அப்போது, அமைச்சர் கண்ணப்பனுக்கு கூடுதலாக காதி மற்றும் கிராம தொழில் வாரியம் ஒதுக்கப்பட்டது. இந்த ஆண்டு மே மாதம், பால் வளத் துறை அமைச்சராக இருந்த நாசர், பதவியிலிருந்து நீக்கப்பட்டார். புதிய அமைச்சராக ராஜா பொறுப்பேற்றார். அப்போது நான்கு அமைச்சர்களின் துறைகள் மாற்றம் செய்யப்பட்டன. அடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் இலாகா இல்லாத அமைச்சராக அறிவிக்கப்பட்டார். அவர் கவனித்து வந்த மின் துறை, அமைச்சர் தங்கம் தென்னரசு வசமும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை, அமைச்சர் முத்துசாமியிடமும் ஒப்படைக்கப்பட்டன. முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்களின் எண்ணிக்கை, 35ல் இருந்து 34 ஆக குறைந்துள்ளது.
