கலாஷேத்ரா மற்றொரு நடன ஆசிரியர் மீது புகார்: விசாரித்து அறிக்கை தர உத்தரவு
கலாஷேத்ரா மற்றொரு நடன ஆசிரியர் மீது புகார்: விசாரித்து அறிக்கை தர உத்தரவு
UPDATED : டிச 24, 2023 12:00 AM
ADDED : டிச 24, 2023 10:05 PM
சென்னை:
கலாஷேத்ரா கல்லுாரியின் மற்றொரு நடன ஆசிரியர் மீது, முன்னாள் மாணவி அளித்த பாலியல் தொல்லை புகார் குறித்து, போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து, 60 நாட்களுக்குள் அறிக்கை தர, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விளம்பரத்துக்காக புகார் அளிக்கப்பட்டதாக தெரியவந்தால், புகார்தாரர் மீது நடவடிக்கை எடுக்கலாம் எனவும் கூறியுள்ளது.சென்னை, அடையாறில் உள்ள கலாஷேத்ரா கல்லுாரியில், மாணவியரை பாலியல் தொந்தரவு செய்ததாக, ஆசிரியர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. முன்னாள் மாணவி ஒருவர் புகாரின்படி, ஹரிபத்மன் என்ற ஆசிரியரை, போலீசார் கைது செய்தனர். தற்போது, அவர் ஜாமினில் வெளியே உள்ளார். இந்நிலையில், மற்றொரு நடன ஆசிரியரும் தன்னிடம் தவறான முறையில் நடத்து கொண்டதாக, பாதிக்கப்பட்ட மற்றொரு மாணவி, சென்னை போலீசில் புகார் அளித்தார்.அந்த புகாரின்படி, சம்பந்தப்பட்ட நடன ஆசிரியர் மீது, வழக்குப்பதிவு செய்து விசாரித்து நடவடிக்கை எடுக்க, டி.ஜி.பி.,க்கு உத்தரவிட கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பெயரை குறிப்பிடாமல் மனு தாக்கல் செய்துள்ளார்.மனு, நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் அளித்த குற்றச்சாட்டு மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. அவரது புகார் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும்.விசாரணை அதிகாரியை நியமித்து, விசாரணையை, 60 நாட்களுக்குள் முடித்து அறிக்கையை, போலீசார் தாக்கல் செய்ய வேண்டும். விளம்பரத்துக்காக புகார் அளிக்கப்பட்டதாக தெரியவந்தால், புகார்தாரர் மீது நடவடிக்கை எடுக்கலாம் என, நீதிபதி உத்தரவிட்டார்.
