அரசு மகளிர் பள்ளியில் நீட் தேர்வு பயிற்சி துவக்கம்
அரசு மகளிர் பள்ளியில் நீட் தேர்வு பயிற்சி துவக்கம்
UPDATED : டிச 26, 2023 12:00 AM
ADDED : டிச 26, 2023 10:33 AM
விழுப்புரம்:
விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில், அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கான நீட் தேர்வுக்கான பயிற்சி துவக்க விழா நடந்தது.கலெக்டர் பழனி தலைமை தாங்கி பேசியதாவது:
விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலை பள்ளியில் நீட் தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளன. அதேபோல், திண்டிவனம் தேசிய மேல்நிலை பள்ளி, செஞ்சி அரசு மகளிர் மேல்நிலை பள்ளி ஆகிய மையங்களிலும் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன.இந்த பயிற்சி, அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் மூலம் நடத்தப்படுகிறது. தேவையான முக்கிய பாட குறிப்பு வழங்குவதோடு, தேர்வுகள் நடத்தி மாணவர்களின் திறன் மேம்பட வழிவகை ஏற்படுத்தப்படுகிறது.இதில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள் நன்றாக பாடங்களை புரிந்து கொண்டு பயில வேண்டும். பாடங்களில் சந்தேகம் ஏற்பட்டால் உடனே ஆசிரியரிடம் கேட்டு தெளிவுபெற வேண்டும்.கவனத்தை சிதறடிக்கும் மொபைல், சமூக ஊடகம், தொலைக்காட்சி ஆகியவற்றில் கவனம் செலுத்துவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். நாள்தோறும் நடத்தும் பாடங்களை அன்றைய தினமே பயின்று முடித்தால், தங்களுக்கு தேர்வு தொடர்பான அச்சமோ, பயமோ ஏற்படாது.இவ்வாறு கலெக்டர் பழனி பேசினார்.மாவட்ட கல்வி அலுவலர் சுப்ரமணியம், முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் பெருமாள், செந்தில்குமார், தலைமை ஆசிரியர் சசிகலா உட்பட அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

