அதிக இனிப்புள்ள புதிய வகை பன்னீர் திராட்சை அறிமுகம்!
அதிக இனிப்புள்ள புதிய வகை பன்னீர் திராட்சை அறிமுகம்!
UPDATED : டிச 26, 2023 12:00 AM
ADDED : டிச 26, 2023 10:34 AM
கம்பம்:
கம்பம் பள்ளத்தாக்கில் அதிக இனிப்பு தன்மையும், செவட்டை நோயை தாங்கி வளரக்கூடிய புதிய பன்னீர் திராட்சை ரகத்தை ஆனைமலையன்பட்டி திராட்சை ஆராய்ச்சி நிலையம் அறிமுகம் செய்ய உள்ளது. இதனை அங்சிகரீத்த வேளாண் பல்கலை விரைவில் முறைப்படி அறிவிக்க உள்ளது.ஆண்டு முழுவதும் கம்பம் பள்ளத்தாக்கில் திராட்சை சாகுபடியாகிறது. காமயகவுண்டன்பட்டி, சுருளிப்பட்டி, அணைப்பட்டி, சுருளி அருவி உள்ளிட்ட பகுதிகளில் பன்னீர் திராட்சை சாகுபடி செய்யப்படுகின்றன. ஓடைப்பட்டி பகுதியிலும் பன்னீர் திராட்சையே பிரதானமாக சாகுபடியாகிறது. விதையில்லா திராட்சை ஒரு சில ஊர்களில் மட்டும் மேற்கொள்ளப்படுகிறது. பன்னீர் திராட்சையில் செவட்டை நோய் தாக்குதல், இனிப்பு தன்மை குறைவாக இருப்பது பிரச்னையாக இருந்து வருகிறது.இப்பிரச்னையை தவிர்க்க ஆனைமலையன்பட்டி திராட்சை ஆராய்ச்சி நிலையம் பன்னீர் திராட்சையில் மேம்படுத்தப்பட்ட ரகம் ஒன்றை அறிமுகம் செய்ய ஆராய்ச்சிகள் செய்து தயார் நிலையில் உள்ளது.இது தொடர்பாக ஆராய்ச்சியாளர் கூறுகையில், பன்னீர் திராட்சையில் மட்டும் 14 ரகங்கள் உள்ளன. தற்போது அதில் 5 வது ரகத்தை ஆராய்ச்சி செய்து புதிய மேம்படுத்தப்பட்ட ரகம் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளோம். தேனி திராட்சை கலெக்சன் 126 ( தேனி கிரேப்ஸ் கலக்ஷன் 126 ) சுருக்கமாக டி.ஜி.சி., 126 என்று பெயரிடப்பட்டுள்ளது.இப்போதுள்ள ரகத்தில் கோடை காலத்தில் கவாத்து அடித்தால், மகசூல் குறையும். அறிமுகம் செய்யப்படவுள்ள புதிய ரகத்தில் மகசூல் குறையாது. பனி காலத்தில் கவாத்து அடித்து கோடையில் அறுவடை செய்தால் இனிப்புத் தன்மை 22 முதல் 26 பிரிக்ஸ் வரை கிடைக்கும். ஆனால் தற்போதுள்ள ரகத்தில் இனிப்புத் தன்மை 18 முதல் 20 பிரிக்ஸ் மட்டுமே உள்ளது. அத்தோடு ஆண்டு முழுவதும் ஒரே சீரான மகசூல் கிடைக்கும். செவட்டை நோயை ஓரளவிற்கு தாங்கி நிற்க கூடியது. இப்புதிய ரகம் குறித்து, விபரங்களை கோவை வேளாண் பல்கலை விரைவில் அறிவிக்கும். அதன் பின் விவசாயிகள் புதிய ரகத்தை சாகுபடி செய்ய தேவையான உதவிகளை ஆராய்ச்சி நிலையம் மேற்கொள்ளும், என்றார்.

