1400 மருந்தாளுனர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும் சங்கம் வலியுறுத்தல்
1400 மருந்தாளுனர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும் சங்கம் வலியுறுத்தல்
UPDATED : டிச 29, 2023 12:00 AM
ADDED : டிச 29, 2023 10:14 AM
விருதுநகர்:
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 1400 மருந்தாளுனர்கள் பணியிடங்கள் உடனடியாக நிரப்ப வேண்டும், என தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுனர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள 1857 அரசு மருத்துவமனைகளில் 1400 மருந்தாளுனர்கள் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளது. இந்த பணியிடங்களை எம்.ஆர்.பி., முறையில் நிரப்ப அறிவிப்பு வெளியாகி பணியாளர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பும் நடந்தது. இந்நிலையில் கொரானோ கால கட்டத்தில் அவசரப்பணிக்காக தேர்வு செய்யப்பட்டு பணியாற்றியவர்கள், தேர்வில் கூடுதல் மதிப்பெண் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.இதனால் மக்களுக்கான மருத்துவ சேவையை வழங்குவதில் தொய்வு ஏற்படுகிறது. மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மூலப்பொருட்களின் விலை உயர்வுக்கேற்ப மருந்து, மாத்திரைகளின் விலையையும் உயர்த்தி வருகின்றன.ஆனால் அதற்கேற்ப தமிழக அரசு மருந்து, மாத்திரைகள் கொள்முதல் செய்வதற்கான நிதியை கூடுதலாக ஒதுக்கீடு செய்வதில்லை. இதனால் சில மருந்துகளின் தட்டுப்பாடு மருந்தகங்களில் நிலவுகிறது.தமிழகத்தில் சில அரசு மருத்துவமனைகளில் மருந்தகங்கள் ஒருபுறமும், மருந்து சேமிப்பு கிடங்கு மற்றொரு புறமும் உள்ளது. இந்த சேமிப்பு கிடங்குகளில் மருந்துகளுக்கான குளிர்சாதன வசதிகள் இல்லை. இதனால் சில மருந்துகளை சேமித்து வைத்து பயன்படுத்துவதில் பாதிப்பு ஏற்படுகிறது.எனவே இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கத்தின் சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பிப். 29ல் ஆர்ப்பாட்டம் நடைபெறும். அடுத்தக்கட்டமாக மார்ச் 14 தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் இயக்குனரிடம் வலியுறுத்த உள்ளோம் என்றார்.