வசதியற்றவர்களும் போட்டித் தேர்வில் இனி சாதிக்கலாம்!
வசதியற்றவர்களும் போட்டித் தேர்வில் இனி சாதிக்கலாம்!
UPDATED : ஜன 07, 2024 12:00 AM
ADDED : ஜன 07, 2024 10:45 AM
கோவை:
மாநகராட்சி சார்பில், ஆடிஸ் வீதியில் ரூ. 2.5 கோடியில், 6,983 சதுரடியில் அதிநவீன வசதிகளுடன் கூடிய, அறிவுசார் மையம் துவக்கப்பட்டுள்ளது. இங்குள்ள பல ஆயிரம் புத்தகங்கள், போட்டித்தேர்வுகளில் பங்கேற்போருக்கு உதவ காத்திருக்கின்றன. தன்னம்பிக்கையும், ஊக்கமும் அளிக்கும் இந்த அறிவுசார் மையத்தில், 100 பேர் அமர்ந்து படிக்க ஏதுவாக, இருக்கைகள் இடம்பெற்றுள்ளன. 18 ஆயிரம் புத்தகங்கள் வைக்கும் வகையில் அலமாரிகள் அமைக்கப்பட்டுள்ளன. பல்வேறு தலைப்புகளில் இப்புத்தகங்கள் தகவல் களஞ்சியமாக இருக்கின்றன.பெரியவர்களுக்கு மட்டுமின்றி, 1,000 புத்தக அலமாரிகளுடன் கூடிய சிறுவர், சிறுமியருக்கான பிரத்யேக படிப்பகமும் அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு ஸ்மார்ட் வகுப்பறைகள் ஏசி வசதியுடன் இடம்பெற்றுள்ளன.அன்றாட நிகழ்வுகளை அறிந்து கொள்வதற்கு தமிழ், ஆங்கிலம் தினசரி நாளிதழ்களும் இடம்பெறுவது கூடுதல் அம்சம். தவிர, 15 கம்ப்யூட்டர்கள் கொண்ட டிஜிட்டல் பிரிவும் உள்ளது. வாகன நிறுத்தம், சிற்றுண்டியகம், தாய்மார்கள் பாலுாட்டும் அறை என, ஏகப்பட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.இலவசமாக கிடைக்கும், இங்குள்ள வசதிகளை இளையதலைமுறையினர் சரியாக பயன்படுத்திக் கொண்டால், வரும் காலங்களில் போட்டித்தேர்வுகளை, ஒரு கை பார்க்க முடியும்.