ஸ்டோர் ரூமில் தூங்கிய நாராயணமூர்த்தி: சுயசரிதை புத்தகத்தில் தகவல்
ஸ்டோர் ரூமில் தூங்கிய நாராயணமூர்த்தி: சுயசரிதை புத்தகத்தில் தகவல்
UPDATED : ஜன 08, 2024 12:00 AM
ADDED : ஜன 08, 2024 09:37 AM
புதுடில்லி:
இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி, நிறுவனம் துவக்கிய புதிதில் அமெரிக்கா சென்ற போது, அங்குள்ள அமெரிக்க வாடிக்கையாளர் ஒருவர், தன் வீட்டில் உள்ள, ஸ்டோர் ரூம்மில் துாங்கும்படி சொன்ன சம்பவத்தை, அவரது மனைவி சுதா மூர்த்தி சுயசரிதை நுாலில் பகிர்ந்துள்ளார்.ஆரம்பகால வாழ்க்கை
இன்போசிஸ் எனும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை துவக்கியவர் நாராயணமூர்த்தி, 77. இவரது மனைவி சுதா மூர்த்தி, 73. இருவரது இளமைக்கால வாழ்க்கையை, எழுத்தாளர் சித்ரா பானர்ஜி திவாகாருணி சுயசரிதையாக எழுதி வெளியிட்டுள்ளார்.அசாதாரண காதல்:
சுதா மற்றும் நாராயண மூர்த்தியின் ஆரம்பகால வாழ்க்கை என்ற பெயரில் புத்தகம் வெளியாகி உள்ளது. இன்போசிஸ் துவங்கிய ஆரம்ப காலக்கட்டங்களில் நாராயணமூர்த்தி சந்தித்த கஷ்டங்களை அவரது மனைவி விளக்கியுள்ளார்.அந்த நுாலில் சுதா மூர்த்தி கூறியுள்ளதாவது:
இன்போசிஸ் சிறிய நிறுவனமாக இருந்த சமயத்தில் நாராயணமூர்த்தி அமெரிக்காவின் மன்ஹாட்டனில் உள்ள ஒரு வாடிக்கையாளர் நிறுவனத்திற்கு சென்றார். டேட்டா பேசிக்ஸ் கார்ப்ரேஷன் என்ற அந்த நிறுவனத்தின் தலைவராக டான் லைலெஸ் இருந்தார்.அட்டைப் பெட்டி
முசுடு பேர்வழியான அவர் கடைசி நேரத்தில் தயாரிப்புகளில் திருத்தங்களை கூறுவார். கட்டணங்களை வேண்டுமென்றே தாமதப்படுத்துவார். அது குறித்து நாராயணமூர்த்தி வாதிட்டால் அவர் மீது கோபப்படுவார்.அவரது வீட்டுக்கு நாராயணமூர்த்தி சென்றிருந்த போது, தங்குவதற்கு தனி அறை கூட தராமல் ஸ்டோர் ரூமில், அட்டைப் பெட்டிகளுக்கு நடுவே உறங்கிக் கொள்ளும்படி கூறியுள்ளார். இதை மூர்த்தி என்னிடம் சொன்ன போது எனக்கு கடும் கோபம் வந்தது. நிறுவனத்தின் வளர்ச்சிக்காக அதை பொறுத்துக் கொண்டார்.அதே போல நிறுவனத்தில் இணைந்து பணியாற்ற நான் விருப்பம் தெரிவித்தேன். ஆனால் அதை மூர்த்தி திட்டவட்டமாக மறுத்துவிட்டார். கணவன்- மனைவி ஒரே நிறுவனத்தில் பணியாற்றினால், அந்நிறுவனம் தொழில்முறை நிறுவனமாக இருக்காது. குடும்ப நிறுவனமாக சுருங்கிவிடும் என கருதினார். இவ்வாறு அந்நுாலில் சுதா மூர்த்தி கூறியுள்ளார்.