UPDATED : ஜன 14, 2024 12:00 AM
ADDED : ஜன 14, 2024 11:17 AM
சென்னை:
மாதா, பிதா, குரு, தெய்வத்தோடு இனி புத்தகத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என புத்தகக் காட்சியில் வழக்கறிஞர் நாதன் பேசினார்.புத்தகக் காட்சியில், காலத்தை வெல்லும் புத்தகம் எனும் தலைப்பில், வழக்கறிஞர் எம்.பி.நாதன் பேசியதாவது:
புத்தகங்களைத் தவிர வேறு எதுவும் மனதைப் பண்படுத்தாது. நம்மை ஒழுங்குபடுத்தும் புத்தகங்களே, மனம் எனும் பூட்டுக்கு பொருத்தமான சாவியாக உள்ளது என்பதை நிரூபித்து வரும் இந்தப் புத்தகக் காட்சி, சிந்தனைக் களமாக மாறி உள்ளது.கற்றுத் தரும் ஆசிரியருக்கு, சில வரைமுறைகள் உண்டு. ஆனால் புத்தகங்களுக்கு, எந்த வரையறையும் இல்லை. புத்தகங்கள் போதிக்கும் அறிவை, நம்மிடமிருந்து எவரும் பறித்துவிட முடியாது.ஒரு புத்தகத்தைப் புரிந்து படிக்கும்போது, அந்தப் புத்தகம், வானில் சிறகடித்து நம்மைப் பறக்க வைக்கும். எனவே, மாதா, பிதா, குரு, தெய்வத்தோடு இனி புத்தகத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.காலத்தை வெல்லும் புத்தகங்கங்கள், நம் நாட்டில் ஏராளம் உள்ளன. அவற்றை எண்ணிக்கையால் வரையறுக்க முடியாது. வள்ளுவரும், அவ்வையாரும், ராமலிங்க அடிvகளாரும், புதுமைப்பித்தன், கல்கி உள்ளிட்டோரும் எழுதிய படைப்புகளெல்லாம், காலத்தை வென்று நிற்பவைதான்.காலத்தால் எழுதப்பட்ட புத்தகங்களும் நம் நாட்டில் நிறைய உள்ளன. அதில் ஒன்றுதான் மகாபாரதம். மொபைல் போன் வருகையால், எழுதும் பழக்கம் இன்று காணாமல் போய்க்கொண்டிருக்கிறது. ஒரே ஒரு பக்கம்கூட பிழையின்றி எழுத இன்றைய தலைமுறை தயங்குகிறது.ஆனால், 46,000 பக்கங்கள் உள்ள இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை தன் கைப்பட, பிழையின்றி எழுதினார் அம்பேத்கர். அந்த வகையில், இந்திய அரசியலமைப்பு சட்டப் புத்தகம்கூட, காலத்தை வென்ற புத்தகம்தான்.இவ்வாறு அவர் பேசினார்.