அரசு பள்ளிகளில் கேன்டீன்களில் பெண்களுக்கு தொழில் வாய்ப்பு
அரசு பள்ளிகளில் கேன்டீன்களில் பெண்களுக்கு தொழில் வாய்ப்பு
UPDATED : ஜன 19, 2024 12:00 AM
ADDED : ஜன 19, 2024 09:58 AM
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டத்தில் பெண்களின் மேம்பாட்டுக்காக மாவட்ட நிர்வாகம் அரசு பள்ளிகளில் மகளிர் குழுக்கள் கேன்டீன் வைப்பதற்கும், செயல்படாத கட்டடங்களில் புதிய தொழில் துவங்கவும் வழிகாட்டுகிறது.மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர்களுக்கு தேவையான நோட்டு புத்தகம், பேனா, பென்சில் போன்ற எழுது பொருட்களை, பள்ளி வளாகத்திற்குள்ளேயே கிடைக்கச் செய்யும் நோக்கிலும், போதைப் பொருள் கலந்த உணவுகளை அறியாமல் வாங்கி உண்பதை தவிர்க்கும் நோக்கிலும் பள்ளி வளாகத்திற்குள் மகளிர் குழுக்கள் மூலம் கேன்டீன்கள் துவங்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் 8 பள்ளிகளில் மகளிர் குழு கேன்டீன்கள் அமைக்கப்பட்டுள்ளன.* செயல்படாத கட்டடங்களில் வாய்ப்பு
அனைத்து ஊராட்சிகளிலும் செயல்படாமல் இருந்த கிராம ஊராட்சி சேவை மைய கட்டடங்கள், சுயஉதவிக்குழு கட்டடங்கள், தற்போது புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஊரக வாழ்வாதார இயக்கத்திற்கு சொந்தமான கட்டடங்களில் தொழில் துவங்கவும், விற்பனை பொருட்கள் தயாரிக்கவும், அவற்றில் வைத்து விற்கவும் மாவட்ட நிர்வாகம் இட வசதி ஏற்பாடு செய்துள்ளது. சிலர் தையலகமாகவும், சிலர் உணவு பொருட்கள் உற்பத்தி மையாகவும் பயன்படுத்தி வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகின்றனர்.இதே போல் மகளிர் குழு உறுப்பினர் ஒவ்வொருவரும் தினமும் ரூ.ஆயிரத்திற்கு மேல் வருவாய் ஈட்ட ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் மூலம் அவர்கள் வசிக்கும் இடத்தின் அருகிலேயே சுயதொழில் தொடங்குவதற்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இதில் சணல் பை தயாரித்தல், ஊறுகாய் தயாரித்தல், கூடை பின்னல், பினாயில் தயாரித்தல், சிறுதானிய மதிப்புக்கூட்டுதல் போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டன.யாரிக்கும் பொருட்களை விற்க டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சியும் வழங்கப்படுகிறது. இவ்வாறு தயாரிக்கும் பொருட்கள் விருமதி என பெயரிடப்பட்டு விற்கப்படுகின்றன. விருதுநகரில் இருந்து விரு, மகளிர் திட்டம் என்பதில் இருந்து மதி என இப்பெயர் உருவாக்கப்பட்டுள்ளது.* கைகொடுக்கும் ரெடிமேட் சப்பாத்தி
விருதுநகர் வச்சக்காரப்பட்டி லில்லி மகளிர் குழுவினர் ரெடிமேட் சப்பாத்தி தயாரிக்கும் இயந்திரம் வாங்கி, ரெடிமேட் சப்பாத்திகள் தயாரிக்கின்றனர். ஆர்வமுள்ள மகளிர் குழுவினருக்கு உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்த மானிய திட்டம் அல்லது வங்கி மூலம் கடன் உதவி பெற்று சப்பாத்தி யூனிட் அமைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு மாவட்ட நிர்வாகம் மகளிர் குழுக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.*அனைத்து பள்ளிகளிலும் கேண்டீன்
குழுவினர் தொழில் துவங்குவதில் பெரிய பிரச்னையாக இருப்பது இடம் தான். அதுவும் கிராம பகுதிகளில் இடம் கிடைப்பது சிரமம். ஆகவே மாவட்ட நிர்வாகமே முன் வந்து செயல்படாமல் இருந்த கட்டடங்களை குழுவின் பல்வேறு தொழில் முனைவோர் பயன்பாட்டிற்காக செயல்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. மாவட்டத்தில் உள்ள மற்ற அனைத்து அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளிலும் கேன்டீன்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் உணவு பொருட்கள் தயாரிக்க ஆர்வமுள்ள தகுதியான பெண்களுக்கு ரெடிமேட் சப்பாத்தி தயார் செய்யும் மையத்தை பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.வீ.ப.ஜெயசீலன், கலெக்டர், விருதுநகர்.