UPDATED : ஜன 22, 2024 12:00 AM
ADDED : ஜன 22, 2024 09:51 AM
சென்னை:
இந்தாண்டு புத்தகக்காட்சியின் நிலை குறித்து, பபாசியின் செயலர் முருகன் பேசினார்.அவரிடம் பேசியதில் இருந்து...
புத்தகக்காட்சிக்கு வரும் புதிய தலைப்பிலான புத்தகங்கள் குறைந்துள்ளதாக குற்றச்சாட்டு உள்ளதே?
பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., வரி உயர்வு, கொரோனா உள்ளிட்ட தொடர் தாக்குதல்களால் பதிப்பாளர்கள் பாதிக்கப்பட்டனர். தொடர்ந்து, வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்டனர். என்றாலும், அவற்றையும் கடந்து, நிறைய புதிய புத்தகங்களை அனைத்து பதிப்பாளர்களும் பதிப்பித்து, புத்தகக்காட்சிக்கு கொண்டுவந்து உள்ளனர்.புதிய வாசகர்களின் வரவும் குறைந்துள்ளதாமே?
முன்பெல்லாம், பல ஊர்களில் இருந்து சென்னை புத்தகக்காட்சிக்கு வாசகர்கள் வருவர். தற்போது, ஒவ்வொரு மாவட்டத்திலும் புத்தகக்காட்சி நடத்தப்படுவதால், தீவிர வாசகர்கள் அங்கேயே புத்தகங்களை வாங்கி விடுகின்றனர்.மேலும் சிலர், புதிய புத்தகங்களை இணையதளம் வழியாகவும், நுால் விமர்சனம் வாயிலாகவும் அறிந்து, அந்தந்த பதிப்பகத்திடம் இருந்து கூரியரில் புத்தகங்களை வாங்கி விடுகின்றனர்.அந்த வாசகர்கள் சென்னை புத்தகக்காட்சிக்கு வருவதில்லை. இதனால், வாசகர்கள் குறைந்துவிட்டதாக தோன்றும். ஆனால், அந்த வாசகர்களையும் கணக்கிட்டால், தற்போதைய வாசகர்களின் எண்ணிக்கை அதிகம் தான்.நீங்கள் பபாசியின் செயலராக மூன்றாவது முறையாக தொடர்கிறீர்கள், புதிய உறுப்பினர் சேர்ப்பதில் என்ன பிரச்னை?
புதிய உறுப்பினர்களை சேர்த்துக்கொண்டு தான் உள்ளோம். அதில் எந்த பிரச்னையும் இல்லை. அதேநேரம், தற்போதைய புத்தகக்காட்சியில், 950 விற்பனை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுவே அதிகம்தான்.இன்னும் அதிக உறுப்பினர்களை சேர்த்தால், இன்னும் நிறைய அரங்குகளை ஒதுக்க வேண்டியிருக்கும். அதற்கான இடம் இங்கு இல்லை. இதுபோன்ற நடைமுறை சிக்கல்களால் தான், பபாசி தொடர்ந்து புதிய உறுப்பினர் சேர்க்கையில் யோசிக்கிறது.வாசகர்கள் - படைப்பாளர்கள் மாறியிருக்கிறார்களா?
ஆமாம். தற்போது முற்போக்கு, சூழலியல், குழந்தைகளுக்கான படைப்புகள் அதிகம் வெளிவருகின்றன. அவற்றை வாசகர்களும் விரும்பி வாங்குகின்றனர். அதே நேரம், கல்கி, சாண்டில்யன், விக்கிரமன், மணிசேகரன் போன்ற கள ஆய்வின் அடிப்படையில் வரலாற்று புனைவுகளை எழுதும் எழுத்தாளர்கள் குறைந்துவிட்டனர்.தற்போதைய பெரும்பாலான வரலாற்று புனைவு எழுத்தாளர்களுக்கு, ஏற்கனவே உள்ள புத்தகங்களும், இணைய பக்கங்களுமே போதுமானதாக உள்ளன. இவர்களின் எழுத்துகளால் வாசகனின் பசியை போக்க முடியவில்லை. அறிவியல் புனைவுகளிலும் சுஜாதாவின் இடம் காலியாக உள்ளதாகவே பலரும் சொல்கின்றனர். அதையும் படைப்பாளிகள் கவனிக்க வேண்டும். அதே நேரம், நவீன இலக்கியங்களில் இருவருமே அதிகம் இயங்குகின்றனர்.அரசின் ஒத்துழைப்பு எப்படி உள்ளது?
நீங்களே பாருங்கள், சாலைகளில் போலீசார் வாகனங்களை வழிநடத்துகின்றனர். உள்ளே ஆம்புலன்ஸ் உள்ளது. கட்சி சார்பின்றி முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் தொடர்ந்து பங்கேற்கின்றனர்.அரசின் ஒத்துழைப்பும், பத்திரிகைகளின் ஒத்துழைப்பும் இல்லாவிட்டால், சென்னை புத்தகக்காட்சி இவ்வளவு எதிர்பார்ப்பையும் வளர்ச்சியையும் எட்டியிருக்காது.உங்களுக்கான நிரந்தர புத்தகக்காட்சிக்கான இடம் கிடைத்து விட்டதா?
அரசுக்கு நாங்கள் நான்கு இடங்களை காட்டியுள்ளோம். அவற்றில் ஏதேனும் ஒரு இடத்தில் மூன்று ஏக்கர் நிலம் ஒதுக்கினால், அது சாத்தியம். அந்த அறிவிப்பிற்காக காத்திருக்கிறோம்.