UPDATED : ஜன 23, 2024 12:00 AM
ADDED : ஜன 23, 2024 09:44 AM
திருப்பூர்:
கல்லுாரியில் அதிக ராகிங் சம்பவங்கள், அதுசார்ந்த வழக்குகள் கண்டறியப்பட்டால் அதற்கு கல்லுாரி முதல்வர் பொறுப்பேற்க நேரிடும். தேவைப்பட்டால் அவர்கள் ராகிங் தடுப்பு கண்காணிப்பு குழுவிடம் விளக்கம் அளிக்க வேண்டும் என யு.ஜி.சி., எச்சரித்துள்ளது.இது தொடர்பாக பல்கலை கழக மானியக்குழு (யு.ஜி.சி.,) அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
கல்வி நிறுவனங்களில், ராகிங் செயல்பாட்டை தடுக்க வழிகாட்டுதல் யு.சி.ஜி.,யால் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. அதனை பின்பற்றி ராகிங் தடுப்பு மையம் அமைத்தல், முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்துதல், வளாகங்களில் விழிப்புணர்வு பதாகை வைத்தல் உட்பட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. ராகிங் விதிகளை மீறுவது தண்டனைக்குரிய குற்றம்.எனவே, மாணவர்களிடம் சுமூகமான உறவை ஏற்படுத்த, கல்வி நிறுவனங்கள் முயற்சிக்க வேண்டும். ராகிங் தடுப்பு மையங்களுக்கு சட்ட ஆலோசகர்கள் நியமித்து அவர்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும். கல்லுாரிகளில் ராகிங் சம்பம், அது சார்ந்த வழக்கு கண்டறியப்பட்டால் அதற்கு கல்லுாரி முதல்வர் பொறுப்பேற்க நேரிடும். தேசிய ராகிங் தடுப்பு கண்காணிப்பு குழுவிடம் அவர்கள் விளக்கம் அளிக்கவும் வேண்டும்.அதனால், ராகிங் அச்சுறுத்தல்களை முழுமையாக கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையை உயர்கல்வி நிறுவனங்கள் முன்னெடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.