UPDATED : ஜன 29, 2024 12:00 AM
ADDED : ஜன 30, 2024 07:10 AM
பெலகாவி:
பெலகாவியின் முதலகி ஹல்லுார் கிராமத்தில் வசிக்கும் தம்பதி உதயா - சம்பதா. இந்த தம்பதியின் மகன் ஓம்கார் குல்கர்னி, 27. இவர் சிவில் இன்ஜினியர். பெலகாவியில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, வேலையை உதறினார்.அதன்பின்னர் ஹல்லுார் கிராமத்தில் 2 ஏக்கரில் தோட்டம் வாங்கினார். அங்கு தர்ப்பூசணி செடிகளை பயிரிட்டார். தற்போது தர்ப்பூசணி பழங்கள் நன்கு விளைந்து உள்ளன. பழங்களை விற்று மாதந்தோறும் லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்.இதுகுறித்து ஓம்கார் குல்கர்னி கூறியதாவது:
கோடை காலங்களில் தர்ப்பூசணி பழம் சாப்பிடுவது, உடலுக்கு நல்லது என்று சொல்வர். இதனால் தர்ப்பூசணி செடிகளை பயிரிட்டு வளர்க்க வேண்டும் என்று ஆசை வந்தது. நான் ஒரு நிறுவனத்தில் 50,000 ரூபாய் சம்பளத்திற்கு வேலை செய்தேன். அந்த வேலையால் தன்னிறைவு அடையவில்லை. தர்ப்பூசணி செடிகள் வளர்க்க ஆசைப்படுவது குறித்து, எனது பெற்றோரிடம் கூறிய போது, அவர்களும் எனது ஆசைக்கு மரியாதை அளித்து, சம்மதம் தெரிவித்தனர்.இதன்பின்னர் 13,000 தர்ப்பூசணி செடிகளை வாங்கி வந்து, தோட்டத்தில் நட்டேன். செடிகள் நன்கு வளருவதற்கு தேவையான, உரங்களை ஆன்லைனில் தேடி வாங்கினேன். தற்போது தோட்டத்தில், தர்ப்பூசணி பழங்கள் நன்கு விளைந்து உள்ளது. ஒவ்வொரு பழமும் 4 கிலோ முதல் 5 கிலோ எடையில் உள்ளது.மாதந்தோறும் பழங்களை விற்பதன் மூலம் 2.50 லட்சம் ரூபாய் கிடைக்கிறது. இதில் செலவாக 1.50 லட்சம் ரூபாய் ஆகிறது. எனது தோட்டத்தில் காலியாக இருக்கும் இடத்தில், கரும்பு, மஞ்சள் பயிரிடவும் முடிவு செய்து உள்ளேன்.உயர்கல்வி படித்ததை பயன்படுத்தி, விவசாயத்தில் நல்ல நிலையை அடைய முடியும். மாத சம்பளத்திற்கு வேலை தேடி அலைவதை விட, விவசாயம் செய்து அதில் கிடைக்கும் லாபத்தில், தன்னிறைவு வாழ்க்கை வாழலாம். இவ்வாறு அவர் கூறினார்